UPDATED : ஜன 29, 2026 01:25 PM
ADDED : ஜன 29, 2026 01:26 PM

கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்திறன் தேர்வு கடந்த இரண்டு நாட்களாக நடந்தது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறை, சிறை துறை மற்றும் தீயணைப்புத் துறை ஆகிய துறைகளுக்கான இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்திறன் தேர்வு கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நேற்று முன் தினம் துவங்கியது.
டி.ஐ.ஜி., மகேஷ்குமார், எஸ்.பி., ஜெயக்குமார் முன்னிலையில் போலீஸ் அதிகாரிகள் உடற்திறன் தேர்வுக்கு வந்தவர்களை சோதனை செய்தனர்.
நேற்று முன்தினம், நேற்று என இரண்டு நாட்களாக நடந்த தேர்வில் சான்றிதழ் சரி பார்த்தல், உயரம், மார்பளவு அளித்தல், 1500 மீ.,ஓட்டம் உள்ளிட்டவை நடந்தன.
இன்று மற்றும் நாளை கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 அல்லது 400மீ., ஓட்டம், குண்டு எறிதல் தேர்வுகள் நடக்க உள்ளது.
இரண்டாம் நிலை காவலர் உடற்திறன் தேர்வு நடக்கும் இடங்களில் சி.சி.டி.வி., கேமரா அமைத்து கண்காணிக்கப்படுகிறது. மேலும் தேர்வு முழுவதும் வீடியோ பதிவும் செய்யப்படுகிறது. டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உள்ளிட்ட 350 பேர் தேர்வுப் பணியில் ஈடுபடுகின்றனர். மருத்துவக் குழுவினர், 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் தேர்வு நடந்த இடத்தில் பாதுகாப்புக்காக உள்ளனர்.

