பிஸியோதெரபிஸ்டுகள் சம்பள உயர்வுக்கு வரவேற்பு: தினமலர் செய்தி எதிரொலி
பிஸியோதெரபிஸ்டுகள் சம்பள உயர்வுக்கு வரவேற்பு: தினமலர் செய்தி எதிரொலி
UPDATED : மார் 09, 2026 12:13 PM
ADDED : மார் 09, 2026 12:14 PM

மதுரை:
தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவ திட்ட பிஸியோதெரபிஸ்டுகளுக்கு மாதச் சம்பளத்தை தமிழக அரசு ரூ.23 ஆயிரமாக உயர்த்தியதை இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்கள் சங்க தமிழ்நாடு கிளை வரவேற்றுள்ளது.
இது குறித்து சங்க தமிழ்நாடு தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:
மருத்துவத் துறையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பிசியோதெரபிஸ்டுகளுக்கு ரூ.35 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். மக்களை தேடி மருத்துவம் திட்ட பணியாற்றுவோர் சங்கமும் முயற்சிகள் எடுத்தது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பிஸியோதெரபிஸ்டுகளுக்கு ரூ.23 ஆயிரமாக சம்பளம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலின், துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் பிசியோதெரபிஸ்டுகள் தற்போது வாடகை அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.
இவர்களை மாவட்ட சுகாதார குழுமத்தின் கீழ் கொண்டு வந்து சம்பளமாக ரூ.23 ஆயிரம் வழங்க வேண்டும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் வீடுகளுக்கு சென்று மருத்துவ சேவை அளிப்போருக்கும் வழங்க வேண்டிய ஊக்கத் தொகை நிலுவையில் உள்ளது. அதை தாமதமின்றி வழங்க வேண்டும்.
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் சிறப்பு குழந்தைகளுக்காக பணியாற்றும் பிசியோதெரபிஸ்டுகளுக்கு 6 ஆண்டுகளாக சம்பள உயர்வு வழங்கவில்லை. அவர்களுக்கும் உடனே வழங்க வேண்டும் என்றார்.

