குழந்தைகள் செல்போன் பயன்படுத்த தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும்
குழந்தைகள் செல்போன் பயன்படுத்த தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும்
UPDATED : மார் 09, 2026 12:10 PM
ADDED : மார் 09, 2026 12:12 PM

13, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் 'சோஷியல் மீடியா' என்கிற சமூக வலைதளங்களை பயன்படுத்த கர்நாடகா, ஆந்திரா அரசுகள் தடை விதிக்க திட்டமிட்டுள்ளன. அது பற்றி நம் கோவை மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
பெற்றோர் தான் காரணம்
குழந்தைகள் அழுதால் பொம்மை கொடுப்பது அந்த காலம். மொபைல் போன் கொடுத்து சமாதானம் செய்வது இந்த காலம். குழந்தைகள் மொபைலுக்கு அடிமையாவது இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. மொபைலில் நல்லதை விட கெட்ட விஷயங்கள் தான் அதிகம். பார்த்து பழகிவிட்டால் பிறகு தடுக்க முடியாது. ஆகவே இந்த தடை தமிழகத்துக்கும் தேவை.
- அறிவு சுபா, சித்தாபுதூர்
கட்டுப்படுத்த முடியாது
சமூக ஊடகங்களில் குழந்தைகள் பெயரில் இருக்கும் கணக்குகளை வேண்டுமானால் முடக்கலாம். வீட்டில் பெற்றோர் கண்டிப்புடன் இருந்தாலே, குழந்தைகள் அதிக நேரம் சமூக ஊடகங்களில் நேரம் செலவழிப்பதை தடுக்க முடியும். அரசு தடை விதித்தால் மட்டும் இந்த பழக்கம் ஒழிந்துவிடாது.
- கே.ஸ்ரீதரன், ராமநாதபுரம்
நல்ல முன்னெடுப்பு
மொபைல் போன், லேப்டாப் வழியாக பாடம் நடத்துவது, வீட்டுப்பாடம் சமர்ப்பிக்க அறிவுறுத்துவது போன்ற கல்விசார் செயல்பாடுகள் தரப்படுகின்றன. நல்ல விஷயம் என்றாலும் பெற்றோர் கண்காணிப்பது அவசியம். தவறும் பட்சத்தில், குழந்தைகள் வழி மாறி செல்ல வாய்ப்புள்ளது. தமிழக அரசும் களத்தில் இறங்க வேண்டும்.
- எஸ்.முருகன், ஒலம்பஸ்
முதலில் எதற்கு தடை?
சோஷியல் மீடியா பார்க்க போன் வாங்கி கொடுக்கவில்லை. பள்ளிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகளால் தான் மொபைல் வாங்கி கொடுக்கிறோம். வகுப்பு முடிந்ததும் சோஷியல் மீடியா, வீடியோ கேம் என்று போகின்றனர். சில ஆப்களை லாக் செய்தாலும் ஈசியாக ரிலீஸ் செய்கின்றனர். ஆன்லைன் வகுப்புக்கு முதலில் தடை விதியுங்கள்.
- எ.ஜான்சி ராணி, புலியகுளம்.
18 வயது வரை தடை
நல்ல முடிவு. இரண்டு வயதிலேயே சோஷியல் மீடியா அடிமையாகின்றனர். உறவுகளின் மதிப்பு தெரியாமல் போகிறது. கவனக்குறைவால் படிப்பு பாதிக்கப்படுகிறது. 18 வயதுக்கு கீழே சமூக ஊடகமே தேவையில்லை. கல்விக்காக மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கலாம். தமிழகமும் தடை விதிக்க வேண்டும்.
- ரெஜீ மோகன், மதுக்கரை
முடங்குகிறது
பாராட்ட வேண்டிய தடை. சிறு வயதில் குழந்தைகள் இன்டர்நெட்டுக்கு அடிமையாகி தவறான வழிகளில் செல்கின்றனர். தேசமே இளைஞர்களை நம்பி இருக்கிறது. அவர்கள் இப்படி மூளை முடங்கி அடிமையானால் பாதிக்கப்போவது அவர்களின் குடும்பம் மட்டுமல்ல; மொத்த தேசமும் தான். தமிழக அரசும் தடை விதிக்க வேண்டும்.
- சிஜோ, கணபதி

