UPDATED : ஏப் 02, 2024 12:00 AM
ADDED : ஏப் 02, 2024 12:45 PM
சேலம்:
சேலம் மாவட்டத்தில், மூன்று மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது.
பிளஸ் 2 பொது தேர்வு கடந்த மார்ச், 1 முதல் 22 வரை நடந்தது. சேலம் மாவட்டத்தில், 35,439 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும் கடந்த, 23ல் மண்டல சேகரிப்பு மையங்களுக்கு, பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது. அந்த மையங்களில் இருந்து கடந்த, 28 முதல் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி சேலம் குளூனி பள்ளி, ஆத்துார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கொங்கணாபுரம் ஏ.ஜி.என். பள்ளி என, 3 மையங்களில், 1.50 லட்சம் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இந்த பணியில், 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். வரும், 13 வரை பணி நடைபெற உள்ளது.
மையங்களை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பணிகள் முடிவு பெற்றதும் மதிப்பெண் பதிவேற்றம் நடைபெறும். மே 6ல் பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.