பள்ளி மாணவர் வங்கி கணக்கு ஹெச்.எம்.,களுக்கு எச்சரிக்கை
பள்ளி மாணவர் வங்கி கணக்கு ஹெச்.எம்.,களுக்கு எச்சரிக்கை
UPDATED : ஏப் 02, 2024 12:00 AM
ADDED : ஏப் 02, 2024 12:47 PM

சென்னை:
மாணவர்களின் வங்கிக் கணக்கு விபரம் சேகரிப்பு பணிகளை மேற்கொள்ளாத, தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித் துறை எச்சரித்துள்ளது.
தமிழக பள்ளி கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்று செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, பல்வேறு திட்டங்களில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகையை, மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதற்காக, இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்கள், பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்கு விபரங்களை, ஆன்லைன் வழியில் பதிவு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பல அரசு பள்ளிகளில், இந்தப் பணிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் தரப்பில் போதிய ஒத்துழைப்பு இல்லை என, இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மாணவர்களின் வங்கிக் கணக்கு விபரங்கள் சேகரிப்புக்கு உதவி செய்யாத தலைமை ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.