பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
UPDATED : ஜூன் 05, 2025 12:00 AM
ADDED : ஜூன் 05, 2025 08:55 AM

சென்னை:
பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், இன்று முதல் 7ம் தேதி வரை, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச்சில் நடந்தது. தேர்வு எழுதியவர்களில் பலர், விடைத்தாள் நகல் கோரி, தேர்வுத்துறை இயக்கக இணையதளத்தில் விண்ணப்பித்தனர்.
அவர்களுக்கான விடைத்தாள் நகல் நேற்று மதியம் வெளியிடப்பட்டது. அவற்றை, www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதை சரி பார்த்த பின், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அதே இணையதளத்தில், உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.
அதன் இரண்டு நகல்களை, இன்று முதல் 7ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட, மாவட்ட தேர்வு உதவி இயக்குநர் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.
புதிதாக உருவாக்கப்பட்ட, மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், விண்ணப்பங்களை முதன்மை கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
மறு மதிப்பீடுக்கான விண்ணப்ப கட்டணமாக, பாடத்துக்கு 505 ரூபாய்; மறு கூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு 305 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு 205 ரூபாய் செலுத்த வேண்டும்.
தேர்வர்கள், விண்ணப்பிக்கும்போது தரப்படும் ஒப்புகை சீட்டை, பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை அறிய முடியும்.