UPDATED : ஏப் 17, 2024 12:00 AM
ADDED : ஏப் 17, 2024 10:33 AM

திருப்பூர்:
விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து, பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி, நேற்று துவங்கியுள்ளது.
பிளஸ் 2 தேர்வு, கடந்த மார்ச், 22ல் நிறைவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணி, கடந்த, 1ம் தேதி துவங்கியது. திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகர் இன்பான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம், விவேகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு மையங்களில், முதன்மை கண்காணிப்பாளர், முதன்மை கூர்நோக்கு அலுவலர் உட்பட, முதுகலை ஆசிரியர் குழுவினர் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
முதல் மூன்று நாட்கள் மொழித்தாள்களும், 4ம் தேதி முதல் முக்கியத் தேர்வு விடைத்தாள்களும் திருத்தப்பட்டது; கடந்த, 12ம் தேதி இப்பணி முடிந்தது. இந்நிலையில், மதிப்பெண்களை தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றும் பணி, நேற்று துவங்கியது. இப்பணி முடிந்த பின், விடைத்தாள் திருத்தும் மையங்களில் இருந்து, விரிவான பட்டியல், தேர்வுத்துறைக்கு நடப்பு வாரத்தில் அனுப்பி வைக்கப்படும். வரும், மே, 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.