மாதிரி பள்ளி மாணவர் சேர்க்கை: தன்னார்வலர்கள் விழிப்புணர்வு
மாதிரி பள்ளி மாணவர் சேர்க்கை: தன்னார்வலர்கள் விழிப்புணர்வு
UPDATED : ஏப் 17, 2024 12:00 AM
ADDED : ஏப் 17, 2024 10:31 AM

உடுமலை:
மாநில அரசின் சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதிரி உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்படுகின்றன.
இப்பள்ளிகளில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கான வகுப்புகளும் அவர்களுக்கான உணவு மற்றும் தங்குவதற்கான வசதிகளும் அரசின் சார்பில் செய்யப்படுகிறது.
இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு போட்டித்தேர்வுகள், உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு, சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. மாதிரிப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு, ஒவ்வொரு அரசு பள்ளியில் படிக்கும் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில், பல்வேறு தரநிலைகளில் சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
மாதிரிப்பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் இருப்பினும், மாணவர்கள் அதற்கு தகுதி பெற்றும் பல பெற்றோர் புறக்கணிக்கின்றனர். இதனால் சேர்க்கையில் சிக்கல் ஏற்படுகிறது. புதிய கல்வியாண்டில் இப்பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்கு, இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, மாதிரி பள்ளியில் படிப்பதற்கு தகுதியுள்ள, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் பட்டியல்கள் தன்னார்வலர்களிடம் வழங்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, அவர்கள் மாணவர்களின் பெற்றோரை அணுகி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தகுதியான தன்னார்வலர்கள் குறித்து, தற்போது கல்வித்துறை பட்டியல் தயாரித்து வருகிறது.