பிளஸ் 2 கணிதத்தேர்வில் தில்லுமுல்லு தனியார் பள்ளியில் சி.இ.ஓ., விசாரணை
பிளஸ் 2 கணிதத்தேர்வில் தில்லுமுல்லு தனியார் பள்ளியில் சி.இ.ஓ., விசாரணை
UPDATED : ஏப் 09, 2026 12:47 PM
ADDED : ஏப் 09, 2026 12:49 PM
சேலம்:
தனியார் பள்ளியில் பிளஸ் 2 கணிதத்தேர்வில், தில்லுமுல்லு நடந்த சம்பவம் குறித்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரித்தார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச், 3 முதல், 26 வரை நடந்தது. சேலம் மாவட்டம் முத்தம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், மையம் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த, 17ல் கணிதத்தேர்வு நடந்தது. அப்போது தேர்வு எழுதிய அப்பள்ளி மாணவர்கள் பலரும் அடிக்கடி கழிப்பறைக்கு சென்று வந்தனர்.
சந்தேகம் அடைந்த முதன்மை கண்காணிப்பாளர், கழிப்பறைக்கு சென்று பார்த்தார். அங்கு அப்பள்ளி ஆசிரியர் உள்பட, 2 பேர், மொபைல் போனுடன் இருந்தனர். முதன்மை கண்காணிப்பாளரை பார்த்ததும், அந்த இருவரும் தப்பி ஓடினர். பின் கழிப்பறையில் சோதித்த போது, கணித வினாத்தாளில் உள்ள வினாக்களுக்கு, விடை எழுதப்பட்ட தாள்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றை கைப்பற்றிய, முதன்மை கண்காணிப்பாளர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம் ஒப்படைத்து, சம்பவம் குறித்து அறிக்கை அளித்தார்.
இது குறித்து நேற்று முன்தினம் பள்ளி நிர்வாகத்தினரை, மகேஸ்வரி, அவரது அலுவலகத்துக்கு அழைத்து விசாரித்தார்.
இது குறித்து மகேஸ்வரி கூறுகையில், “விசாரணை தொடங்கியுள்ளது. ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீடு பணியில் இருப்பதால், தாமதம் ஏற்படுகிறது. விசாரணை முடிந்த பின், இது குறித்த அறிக்கை இயக்குனரகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
