கல்லூரியில் சேராத பிளஸ் 2 மாணவர்கள்: ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு
கல்லூரியில் சேராத பிளஸ் 2 மாணவர்கள்: ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு
UPDATED : ஜூன் 04, 2025 12:00 AM
ADDED : ஜூன் 04, 2025 10:36 AM
 அன்னுார்: 
கோவை வருவாய் மாவட்டத்தில், 114 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள், உயர்கல்விக்கு செல்வதை உறுதிப்படுத்த பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனையூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பொறுப் பாளராக கோவை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கமலக்கண்ணன் நியமிக்கப்பட்டார். நேற்று ஆனையூர் பள்ளியில் அவர் ஆய்வு செய்தார். ஆய்வில் தலைமை ஆசிரியை அனிட்டா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இங்கு பிளஸ் 2 தேர்வு எழுதிய 32 பேரில் 29 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மூன்று பேர் தேர்ச்சி பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. அந்த மூன்று பேரையும் உடனடியாக துணை தேர்வை எழுத அறிவுறுத்தப்பட்டது. 29 பேரில் 23 பேர் உயர்கல்விக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆறு பேர் உயர் கல்வியில் சேரவில்லை. அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டது.
இதேபோல் அன்னுார் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி, கெம்பநாயக்கன்பாளையம், காட்டம்பட்டி மற்றும் சொக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பொறுப்பு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
கலெக்டர் விரைவில் நடத்த உள்ள ஆய்வுக் கூட்டத்தில், உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களை எண்ணிக்கை, சேராதவர்களின் எண்ணிக்கை, சேராததற்கான காரணங்கள், மாணவர்களுக்கு தேவையான உதவி குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது, என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

