UPDATED : அக் 01, 2025 10:12 AM
ADDED : அக் 01, 2025 10:13 AM
கோவை:
கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களின் தமிழ் பேச்சாற்றல் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் விதமாக, கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற உள்ளன.
கல்லுாரி மாணவர்களுக்கான போட்டி, அக். 9ல் காலை 9 மணிக்கு, கோவை பிஷப் அம்புரோஸ் கல்லுாரி கலையரங்கில் நடைபெறும். ஒவ்வொரு கல்லுாரி சார்பிலும், ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம், மொத்தம் 3 மாணவர்களை, கல்லுாரி முதல்வர் தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான போட்டிகள், அக். 10ல் காலை 9 மணியளவில் பிஷப் அம்புரோஸ் கல்லுாரி கலையரங்கில் நடைபெறும். ஒரு பள்ளியில் இருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம், தகுதியான 3 மாணவர்களைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.
கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி என மூன்று பிரிவுகளிலும் தனித்தனியாகப் பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000ம் வழங்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.