UPDATED : ஆக 14, 2026 05:13 PM
ADDED : ஆக 14, 2026 05:15 PM
வால்பாறை:
பள்ளி படிப்பை தொடர முடியாமல் தவித்த கோவையை சேர்ந்த சிறுவனை, சிங்கப்பெண் அதிரடிப்படையினர் மீட்டு வால்பாறை பள்ளியில் சேர்த்தனர்.
கோவை, குனியமுத்துார் பகுதியை சேர்ந்த, 11 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், அங்குள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், குடும்பத்தகராறு காரணமாக கணவனை பிரிந்ததல், தாயுடன் சிறுவன் வசித்து வந்தான். தாய் கூலி வேலைக்கு சென்று வந்த நிலையில் சிறுவன் படிப்பை தொடரமுடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளான்.
இந்நிலையில், தனது மகனை மீண்டும் படிக்க வைக்க சிங்கப்பெண் அதிரடி போலீசாரிடம், தாய் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, கோவை சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் சிறுவன் தீபக்ராஜாவை மீட்டு, வால்பாறை இன்ஸ்பெக்டர் செல்வம் முன்னிலையில், வால்பாறை நகரில் செயல்படும் பழங்குடியின மாணவர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்த்தனர்.
ஏற்கனவே, இரண்டு பழங்குடியின மாணவர்களை பள்ளியில் சேர்க்க உதவிய சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார், தற்போது மேலும் ஒரு சிறுவனை பள்ளியில் சேர்த்துள்ளதால், போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
