UPDATED : ஜன 02, 2026 08:48 AM
ADDED : ஜன 02, 2026 08:49 AM

சென்னை:
தமிழக அரசின் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம், ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு, பொங்கல் பரிசு வழங்க, 183.86 கோடி ரூபாய் ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின்படி, அரசு பணியில் உள்ள, 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 3,000 ரூபாய் என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு, மிகை ஊதியம் வழங்கப்படும்.
தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறு ம் பணியாளர்கள் மற்றும் 2024 - 25ம் நிதியாண்டில், குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து, மாத அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும், முழு நேர மற்றும் பகுதி நேர பணியாளர்களுக்கு, 1,000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
'சி' மற்றும் 'டி' பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்களுக்கு, 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும். இந்த அறிவிப்பால், மொத்தம் 9.90 லட்சம் பேர் பயனடைவர்.

