ஜனாதிபதி ஊட்டி வருகை; 30ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை
ஜனாதிபதி ஊட்டி வருகை; 30ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை
UPDATED : நவ 27, 2024 12:00 AM
ADDED : நவ 27, 2024 08:28 AM

ஊட்டி:
ஜனாதிபதி வருகையை ஒட்டி, நீலகிரி மாவட்டத்தில், வரும்30ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் ராணுவ பயிற்சி கல்லுாரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (27ம் தேதி) ஊட்டிவந்து, ராஜ்பவனில் தங்குகிறார்.
வரும், 28ம் தேதி சாலை மார்க்கமாக குன்னுார் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு சென்று, அங்கு நடக்க உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 29ம் தேதி வரை ஊட்டி ராஜ்பவனில் ஜனாதிபதி தங்குகிறார். 30ம் தேதி ஊட்டியிலிருந்து கோவை சென்று அங்கிருந்து, திருவாரூர் மத்திய பலகலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற உள்ளார். ஜனாதிபதி வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
நீலகிரி எஸ்.பி., நிஷா கூறுகையில், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, 1000 போலீசார், இம்மாதம், 30ம்தேதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இன்று (நேற்று) முதல், 30ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, என்றார்.