பெயர் மாற்றம் செய்யப்படாமல் செயல்படும் துவக்கப்பள்ளிகள்
பெயர் மாற்றம் செய்யப்படாமல் செயல்படும் துவக்கப்பள்ளிகள்
UPDATED : ஆக 11, 2026 04:41 PM
ADDED : ஆக 11, 2026 04:43 PM
வால்பாறை:
நகராட்சியாக மாறிய பின்னும் அரசு துவக்கப்பள்ளிகளில் பெயர் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது.
வால்பாறை பேரூராட்சி கடந்த, 2010ம் ஆண்டு ஆக.,மாதம் 9ம் தேதி நகராட்சியானது. இதனையடுத்து நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பயணியர் நிழற்க்கூரை முதல் பிற பணிகள் வரை, நகராட்சி என்ற பெயர் தான் எழுதப்பட்டுள்ளது.
ஆனால், வால்பாறையில் உள்ள அரசு துவக்கப்பள்ளிகள் அனைத்தும் நகரா்ட்சி கட்டுப்பாட்டுக்கு வந்து, 16 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், இது வரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி என்ற பெயரிலேயே செயல்படுகிறது.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'அனைத்து அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள், காலை உணவு திட்டங்களில் நகராட்சி என்று தான் பெயர் எழுதப்பட்டுள்ளது.
ஆனால், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும், பள்ளிகளின் பெயர்களில் மாற்றம் செய்யாமல், கல்வி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இதற்கு, கல்வி அதிகாரிகள் தான் பொறுப்பு,' என்றனர்.
வட்டார கல்வி அலுவலர் செல்வியிடம் கேட்ட போது, 'வால்பாறை தாலுகாவில் மொத்தம், 33 அரசு துவக்கப்பள்ளிகள் உள்ளன. நகராட்சியாக பெயர் மாற்றம் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்.
ஆனால் எந்தெந்தப் பள்ளிகள் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன என்ற விபரத்தை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தால், உடனே பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.
