தமிழ்வழி கல்வி படித்தோருக்கு அரசு பணியில் முன்னுரிமை
தமிழ்வழி கல்வி படித்தோருக்கு அரசு பணியில் முன்னுரிமை
UPDATED : ஜன 24, 2026 04:57 PM
ADDED : ஜன 24, 2026 05:00 PM

சென்னை:
தமிழகத்தில், அரசு பணிகளில், தமிழ் வழிக் கல்வியில் படித்தோருக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பான சட்டத்தில், திருத்தம் கொண்டு வருவதற்கான, புதிய சட்ட மசோதா, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசு பணிகளில், நேரடி பணி நியமனம் வழியே நிரப்பப்படும், அனைத்து காலியிடங்களிலும், 20 சதவீதம் இடங்களை, தமிழ் வழியில் படித்தவருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 2010ம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், ஒரு பணிக்கு விண்ணப்பித்தவர், அரசு பணியில் இருக்கிறாரா, இல்லையா என்பதை ஆராயாமல், இதனால் வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு முன்னுரிமை வழங்கி வந்தது.
இந்த சூழ்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கனவே அரசுப் பணியில் உள்ளவர்கள், தமிழ் வழியில் பயின்றவர்கள் என்ற வகைப்பாட்டின் கீழ், முன்னுரிமைக்கு தகுதியற்றவர்கள் என தீர்ப்பளித்தது. இதை தெளிவுப்படுத்தவும், கடந்த 2010 செப்., 7ம் தேதிக்கு பின், இதுநாள் வரை தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பணியில் சேர்ந்தது செல்லும் என்பதை உறுதிப்படுத்தவும், புதிதாக சேருவோருக்கு மட்டும், அச்சலுகையை பயன்படுத்தவும், புதிய சட்ட திருத்த மசோதாவை, மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சட்டசபையில் தாக்கல் செய்தார்.

