உரிய விபரங்களுடன் விண்ணப்பித்தால் விரைவில் ஜி.எஸ்.டி., பதிவு எண்; ஜி.எஸ்.டி., கருத்தரங்கில் தகவல்
உரிய விபரங்களுடன் விண்ணப்பித்தால் விரைவில் ஜி.எஸ்.டி., பதிவு எண்; ஜி.எஸ்.டி., கருத்தரங்கில் தகவல்
UPDATED : பிப் 04, 2026 01:14 PM
ADDED : பிப் 04, 2026 01:20 PM

உடுமலை: உடுமலை தொழில் வர்த்தக சபை சார்பில், ஜி.எஸ்.டி., குறித்த ஆலோசனை மற்றும் கருத்தரங்கம் நடந்தது.
உடுமலை தொழில் வர்த்தக சபை தலைவர் அருண் கார்த்திக் தலைமை வகித்தார். செயலாளர் கந்தசாமி, தொழில்துறையில் உடுமலை, பொள்ளாச்சி, பழநி பகுதிகளில், ஜவுளி மற்றும் தென்னை நார் உற்பத்தி தொழில் வளர்ச்சி குறித்து விளக்கினார்.
கோவை மாவட்ட கயிறு மற்றும் தென்னை நார் பொருட்கள் உற்பத்தி சங்கத்தலைவர் பாலசுப்பிரமணியம், உடுமலை வியாபாரிகள் சங்கம், சிவக்குமார், வரி ஆலோசகர் மன்ற செயலாளர் சரவணன், கட்டுமானர்கள் சங்க தலைவர் பாலமுருகன் உள்ளிட்டோர், ஜி.எஸ்.டி., வரி நடைமுறைகள், அவற்றில் உள்ள சிக்கல்கள் குறித்து பேசினர்.
ஜி.எஸ்.டி., மாநில வரிகள், திருப்பூர் துணை ஆணையர் நாகராஜி, பொள்ளாச்சி துணை ஆணையர் ஜெசிமா பர்வீன், உதவி ஆணையர்கள் ராஜா, முகமத் ஆசிக் ஆகியோர், வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர்.
அப்போது, 'ஜி.எஸ்.டி., பதிவு செய்த நிறுவனங்கள், வணிகர்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினர்.
வணிக வரித்துறை அலுவலகங்களிலிருந்து, வரும் நோட்டீஸ்களுக்கு, சரியான நேரத்திற்குள் பதில்களை அளித்தால், வரி விதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றனர்.
புதிதாக பதிவு எண், விண்ணப்பம் மேற்கொள்ள வேண்டிய சரியான வழிமுறைகள் குறித்தும், அவ்வாறு செய்தால் உடனடியாக பதிவு எண் கிடைக்கும் என தெரிவித்தனர்.
மேலும், கூட்டத்தில் பங்கேற்ற வணிகர்கள் தரப்பில் தெரிவித்த நடைமுறை சிக்கல்கள், சட்ட சிக்கல்கள் குறித்து, உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் என தெரிவித்தனர்.
துணைத்தலைவர் வெங்கடேஷ், ஒருங்கிணைப்பாளர்கள் நாககுமார், கணேசன், இணை செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

