பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூர் வெல்லும்; இது திருப்பூருக்கு திருப்புமுனை
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூர் வெல்லும்; இது திருப்பூருக்கு திருப்புமுனை
UPDATED : பிப் 04, 2026 01:11 PM
ADDED : பிப் 04, 2026 01:14 PM

உலக அளவில் அதிக அளவு ஆடை இறக்குமதி செய்யும் சந்தைகளை பெற்றுள்ளது அமெரிக்கா. அந்நாட்டுக்கான ஆடை ஏற்றுமதியில், சீனா, 22 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் இருக்கிறது. வங்கதேசம், 18 சதவீதத்துடன் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இந்தியா, 6 சதவீத பங்களிப்புடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
அமெரிக்க பொருளாதாரத்தை சீரமைக்கும் முயற்சியாக, இறக்குமதி பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டது. அதன்படி, கடந்த, ஜூன் மாதம் துவங்கி ஆக., மாதம் வரை நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரி, 50 சதவீதம் விதிக்கப்பட்டது.
அதாவது, பரஸ்பர வரியாக, 25 சதவீதமும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்வதற்காக, அபராத வரியாக, 25 சதவீதமும் விதிக்கப்பட்டது. திடீர் வரி உயர்வு காரணமாக, இந்திய ஆடை ஏற்றுமதி வர்த்தகம் தடுமாறியது; கடந்த, செப்., மாதம் துவங்கி, ஜந்து மாதங்களாக, அமெரிக்காவுக்கான ஆடை ஏற்றுமதி பாதித்தது; குறிப்பாக, டிச., மாதத்தில் இருந்து சரியவும் துவங்கியது.
விரைந்து பேச்சு வார்த்தை நடத்தி, பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் உருவாக்க வேண்டுமென, தொழில்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். திடீர் சவாலை சமாளிக்கும் வகையில், மத்திய அரசு நிவாரண திட்டங்களை அறிவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி வந்தனர்.
மத்திய அரசும், வட்டி சமன்படுத்தும் திட்டம், வங்கிக்கடன் மீதான கடன் செலுத்தும் கால வரம்பு நீட்டிப்பு, புதிய கடன் திட்டங்களை அறிவித்து ஆறுதல் கொடுத்தது. அமெரிக்காவை மட்டுமே சார்ந்து இயங்காமல், மாற்று சந்தைகளையும் கண்டறிய வேண்டுமெனவும் குரல் எழுந்தது.
இருப்பினும், அமெரிக்கா என்பது மிகப்பெரிய சந்தை; அதில், இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது; தற்போதுள்ள வரிச்சுமையை தீர்த்து வைத்தால் போதும், வங்கதேசத்தை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு இந்திய ஆடை ஏற்றுமதி அதிகரிக்கும் என, தொழில்துறையினர் ஆனித்தரமாக கூறிவந்தனர். இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் பொறுப்பேற்ற பின், பணிகள் வேகமெடுத்தது. மத்திய அரசின் முயற்சியால், 50 சதவீதமாக இருந்த வரியானது, 18 சதவீதமாக குறைந்துள்ளது.
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற அசராத நம்பிக்கையுடன், அமெரிக்காவுக்கான ஏற்றுமதியாளர்களும், தைரியமாக நம்பிக்கையுடன் காலம் கடத்தினர். அதன்படியே, நம்பிக்கை நனவாகும் வகையில், இந்திய பொருட்களுக்கான வரிவிதிப்பை, அமெரிக்க அதிபர் அதிரடியாக குறைத்துள்ளார்.
அதாவது, ரஷ்யா கச்சா எண்ணெய் கொள்முதலுக்காக விதிக்கப்பட்ட, அபராத வரி, 25 சதவீதம் தள்ளுபடியானது. முதல் கட்டமாக விதிக்கப்பட்ட இறக்குமதி வரி, 25 சதவீதம் என்பது, 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
புதிய வர்த்தக ஒப்பந்தங்களும் உருவாகியுள்ளதால், 2030ம் ஆண்டுக்குள், இந்திய ஆடை ஏற்றுமதி, இரு மடங்கு அதிகரிக்கும். இனிவரும் காலம், திருப்பூருக்கு வசந்தம் வீசப்போகிறது… என, தொழில்துறையினர் உற்சாகத்துடன் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தில், முக்கிய இடத்தில் இருக்கிறது திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம். கொரோனா பெருந்தொற்றுகாலம் வரை, ஐரோப்பிய நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி அதிகமாக இருந்தது. கொரோனாவுக்கு பின், 'சீனா ஒன் பிளஸ்' என்ற கொள்கையை அனைத்து நாடுகளும் கையில் எடுத்தன.
அதனால், சீனாவை மட்டுமே பெரிதும் சார்ந்து இருந்த வளர்ந்த நாடுகள், ஆடை இறக்குதியில் இந்தியாவையும் சேர்த்துக்கொண்டன. அதன் பயனாக, 2020ம் ஆண்டு இறுதிக்கு பின், அமெரிக்காவுக்கான ஆடை ஏற்றுமதி அதிகரித்தது.
இது, படிப்படியாக உயர்ந்து, இந்தியாவில் இருந்து அதிகபட்ச ஆடை இறக்குமதி செய்யும் நாடுகள் வரிசையில், அமெரிக்கா முதலிடத்தை பெற்றது. அவ்வகையில், கடந்த நிதியாண்டில், அமெரிக்காவுக்கான பின்னலாடை ஏற்றுமதி மட்டும், 34 சதவீதமாக உயர்ந்தது.

