UPDATED : பிப் 06, 2026 01:19 PM
ADDED : பிப் 06, 2026 01:20 PM
விருத்தாசலம்:
மங்கலம்பேட்டை அடுத்த கோணாங்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில், வீரமாமுனிவர் 279வது நினைவு நாளையொட்டி, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
வீரமாமுனிவர் எனும் இத்தாலியை சேர்ந்த கான்ஸ்டைன்டன் ஜோசப் பெஸ்கி எனும் பாதிரியார் தமிழ் மொழி மீதான ஆர்வத்தால், தமிழை கற்றுத் தேர்ந்தார். மேலும், தமிழ் இலக்கண, இலக்கிய நுால்களை ஆய்வு செய்த அவர், திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னுால், ஆத்திச்சூடி ஆகியவற்றை ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்த்தார்.
வீரமாமுனிவரின் 'தேம்பாவணி' எனும் தமிழ் காப்பியம், உலகப் புகழ் பெற்றது. அப்போதைய தென்னாற்காடு மாவட்டமாக இருந்த, கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை அடுத்த கோணாங்குப்பம் கிராமத்தில் தங்கி, புனித பெரியநாயகி அன்னை ஆலயம் என்ற தேவாலயத்தை கட்டினார். அவருக்கு தேவாலய முகப்பில், உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. அவரின், 279வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பாதிரியார் ஆக்னல் அடிகள் தலைமை தாங்கினார். வீரமாமுனிவர் சிலைக்கு முகாசபரூர் ஜமீன் வீரசேகர பொன்னம்பல ரமேஷ் கச்சிராயர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கினார்.
முன்னாள் ஊராட்சி துணை தலைவர் ராமர், பேரவை துணைத் தலைவர் வில்லியம் ஜெயராஜ், பொருளாளர் சாமிநாதன் உடனிருந்தனர்.

