ஐரோப்பிய செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட்
ஐரோப்பிய செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட்
UPDATED : டிச 05, 2024 12:00 AM
ADDED : டிச 05, 2024 04:45 PM

சென்னை:
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின், புரோபா - 3 செயற்கைக் கோள்களுடன், இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட் , வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நம் நாட்டின் செயற்கைக்கோள் மட்டுமின்றி, வணிக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கைக் கோளையும் விண்ணில் நிறுத்தி வருகிறது. அதன்படி, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய, புரோபா - 3 பெயரில் இரு சிறிய செயற்கைக் கோள்களை வடிவமைத்துள்ளது. அவற்றின் எடை, 550 கிலோ. இந்த செயற்கைக் கோள்களை சுமந்தபடி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட் நேற்று மாலை, 4:08 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது.
இதற்கான, 25 மணி நேர, கவுன்ட் டவுன் நேற்று முன்தினம் மாலை, 3:08 மணிக்கு துவங்கியது. நேற்று ராக்கெட் ஏவும் பணி, இறுதி கட்டத்தை எட்டியது. திடீரென மாலை, 3:10 மணிக்கு, ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைக்கப்படுவதாகவும், இன்று மாலை, 4:12 மணிக்கு ஏவப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது. சில மணி நேரங்களுக்கு பின், புரோபா 3 செயற்கைக் கோள்களை சுமந்து, பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட், இன்று மாலை, 4:04 மணிக்கு ஏவப்படும் என, இஸ்ரோ தெரிவித்து இருந்தது.
இதன்படி, சரியாக மாலை 4:04 மணிக்கு புரோபா 3 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.,-சி59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

