பி.யு.சி., 2ம் ஆண்டு தேர்வு முடிவு வெளியீடு; தமிழ் பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி
பி.யு.சி., 2ம் ஆண்டு தேர்வு முடிவு வெளியீடு; தமிழ் பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி
UPDATED : ஏப் 11, 2024 12:00 AM
ADDED : ஏப் 11, 2024 05:32 PM
பெங்களூரு:
கர்நாடகாவில், பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில், தமிழ் மொழி பாடத்தில் 100க்கு 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கர்நாடகாவில் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்று வந்தனர். 2022ல், 278 மாணவ - மாணவியர் தேர்வு எழுதி, வெறும் 168 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இது 58.27 சதவீதம்.
இதனால், மாணவர்களிடையே மொழித்திறனை மேம்படுத்தும் வகையில், தமிழ் ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்தன. இதன் விளைவாக 2023ல், 100க்கு 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். அதாவது தேர்வு எழுதிய 226 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில், 2024ம் ஆண்டு பி.யு.சி., தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இரண்டாவது ஆண்டாக, 100க்கு 10-0 சதவீதம் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டு தேர்வு எழுதிய 255 மாணவ - மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சாதனை மாணவர்கள்
கலைப்பிரிவில், மைசூரு துாய பிலோமினாஸ் பி.யு., கல்லுாரி மாணவி பிபின்சி, 100க்கு 91 மதிப்பெண் பெற்று மாநில அளவில் தமிழ் மொழி பாடத்தில் முதல் இடத்தையும்; பெங்களூரு டிஸ்பென்சரி சாலை மாநகராட்சி பி.யு., கல்லுாரி மாணவி புஷ்பலதா, 86 மதிப்பெண் பெற்று, இரண்டாம் இடத்தையும்; இதே கல்லுாரி மாணவி அஸ்மிதா, 82 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
வணிக பிரிவில், பெங்களூரு கோரமங்களா ரெட்டி ஜனசங்கா பி.யு., கல்லுாரி மாணவி மஞ்சு; அண்ணாசாமி முதலியார் சாலை ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., பி.யு. கல்லுாரி மாணவி ஜெயஸ்ரீ ஆகிய இரண்டு பேர் 100க்கு 93 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் தமிழ் மொழி பாடத்தில் முதல் இடத்தை பிடித்தனர்.
பெங்களூரு டிஸ்பென்சரி சாலை மாநகராட்சி பி.யு., கல்லுாரி மாணவி ரூபா, 92 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும்; இந்திராநகர் அம்பேத்கர் பி.யு., கல்லுாரி மாணவர் மகேஸ்வரன், ஹலசூரு செயின்ட் ஆன்ஸ் பி.யு., கல்லுாரி மாணவி ஷாலினி, ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., மாணவர் ஆஷிக் பிலோசான் ஆகிய மூன்று பேர், 91 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
அறிவியல் பிரிவில், ஓசூர் சாலை ஆனேக்கல் விஸ்வசேத்தனா பி.யு., கல்லுாரி மாணவி ஹர்ஷிதா, கோலார் ஓசூர் - மாலுார் சாலை ஆலம்பாடி கிரைஸ்ட் பி.யு., கல்லுாரி மாணவி அனுபமா ஆகிய இரண்டு பேர், தமிழ் மொழி பாடத்தில் 100க்கு 96 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தனர்.
விஸ்வசேத்தனா பி.யு., கல்லுாரி மாணவி சிந்தனா, ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., பி.யு., கல்லுாரி மாணவர் முகமது அத்னான் ஆகிய இரண்டு பேர், 95 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும்; ரிச்மென்ட் சாலை கதீட்ரல் காம்போசிட் பி.யு., கல்லுாரி மாணவர் ஹரீஷ் அனிருத் 93 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
டிஸ்பென்சரி சாலை மாநகராட்சி பி.யு., கல்லுாரி மாணவி சக்தி, 92 மதிப்பெண் பெற்று நான்காம் இடத்தையும், விஸ்வசேத்தனா பி.யு., கல்லுாரி மாணவி சித்ரா 90 மதிப்பெண் பெற்று ஆறாவது இடத்தையும் பிடித்து உள்ளனர்.