டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் மோடி நிகழ்ச்சி குறித்த கேள்வி
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் மோடி நிகழ்ச்சி குறித்த கேள்வி
UPDATED : செப் 01, 2025 12:00 AM
ADDED : செப் 01, 2025 08:55 AM

சென்னை:
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வில், பிரதமர் மோடியின், 'மனதின் குரல்' நிகழ்ச்சி குறித்த கேள்வி இடம் பெற்றிருந்தது.
தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தின் சுரங்க அளவர், தொல்லியல் துறை இளநிலை பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை இளநிலை வரை தொழில் அலுவலர் உட்பட 58 பதவிகளில், மொத்தம் 1,910 காலி பணியிடங்கள் உள்ளன.
இவற்றை நிரப்புவதற்காக, டிப்ளமா மற்றும் ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கான, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று நடத்தியது. இந்த தேர்வில் பங்கேற்க, 76,974 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 51,416 பேர் மட்டுமே பங்கேற்றனர். மீதமுள்ள 25,558 பேர், அதாவது, 33.20 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை.
அதேநேரத்தில், இந்த தேர்வில், பொது அறிவு பாடத்தில், தமிழக அரசின் திட்டங்கள், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, விவசாயிகள் போராட்டம், பிரதமர் மோடியின், 'மனதின் குரல்' நிகழ்ச்சி தொடர்பான கேள்விகள் இடம் பெற்றிருந்தன.
கேள்வி எண் 162ல், '2025ம் ஆண்டின் முதல் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில், இந்திய பிரதமர் மோடி உரையாற்றிய நாள்' என்ற கேள்விக்கு, ஜனவரி 14, 19, 26 மற்றும் மார்ச் 30 என, நான்கு விடைகள் வழங்கப்பட்டிருந்தன.

