போதை பொருள் விவகாரத்தில் மாணவர்களை குறிவைக்கும் ரவுடிகள்: கட்டுப்படுத்துவது சவாலானது என்கிறது போலீஸ்
போதை பொருள் விவகாரத்தில் மாணவர்களை குறிவைக்கும் ரவுடிகள்: கட்டுப்படுத்துவது சவாலானது என்கிறது போலீஸ்
UPDATED : செப் 03, 2024 12:00 AM
ADDED : செப் 03, 2024 12:36 PM
சென்னை:
சென்னை, செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்களின் குடியிருப்புகள் மற்றும் வெளிமாநில மாணவர்கள் தங்கியுள்ள வீடுகளில், நேற்று 1,000க்கும் மேற்பட்ட போலீசார், கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர்.
கஞ்சா பொட்டலங்களுடன் பிடிபட்ட 19 மாணவர்கள், கஞ்சா விற்பனை செய்த தாபா உரிமையாளர் உள்பட, 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புறநகரில் உள்ள கூடுவாஞ்சேரி, பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில், தனியார் மென்பொருள் நிறுவனங்கள், தனியார் பல்கலை உள்ளிட்டவை உள்ளன. இங்குள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பல்கலை விடுதிகள் மற்றும் பல்கலையை சுற்றியுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில், அந்த மாணவர்கள் தங்கி உள்ளனர்.
மாணவ - மாணவியர், மென்பொருள் நிறுவன ஊழியர்கள், வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து, இப்பகுதிகளில் பல ஆண்டுகளாக கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகளவில் நடந்து வருகின்றன.
குறிப்பாக, எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், கஞ்சா விற்பனை செய்வது தொடர்பாக, வெளிமாநில மாணவர்கள், உள்ளூர் ரவுடிகள், முன்னாள் மாணவர்களுக்கு இடையே அடிதடி சம்பவங்கள் நடப்பது வழக்கம்.
கடந்த சில மாதங்களாக, பொத்தேரி ஏரிக்கரை உள்ளிட்ட பொது இடங்களில் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளதாக, தாம்பரம் போலீஸ் கமிஷனரக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, தாம்பரம் கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி தலைமையில், 1,000த்துக்கும் மேற்பட்ட போலீசார், நேற்று அதிகாலை 5:30 மணிக்கு, பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்தனர்.
இந்த குடியிருப்பில் இருந்த 500 வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்து வெளியில் செல்வோர் மற்றும் புதிதாக வருவோரின் வாகனங்களை முழுமையாக சோதனை செய்தனர்.
இதில், பல்வேறு வீடுகளில், சிறு சிறு கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. 500 கிராம் கஞ்சா, கஞ்சா சாக்லெட் - 6, கஞ்சா எண்ணெய் 20 மி.லி., கஞ்சா புகைக்க பயன்படும் மிஷின் 8, ஹோக் பவுடர் -6 கிலோ உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, மாணவர்கள், கஞ்சா வியாபாரிகள் உள்ளிட்ட 21 பேரிடம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எங்கே வாங்கப்பட்டன; விற்பது யார் என்பது தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொத்தேரி பகுதியில் உள்ள அபோட் வேல்யூ அடுக்குமாடி குடியிருப்பில், 168 குழுக்களாக 1,000 காவலர்களுடன் நடத்தப்பட்ட சோதனையில், கஞ்சா, கஞ்சா சாக்லெட் கைப்பற்றப்பட்டது. இதில், 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த, பொத்தேரியில் உள்ள தாபா உரிமையாளரான, உ.பி.,யை சேர்ந்த டப்லு உட்பட, 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில், 60 இரு சக்கர வாகனங்கள், ஒரு கார் உள்ளிட்டவை, யாரும் உரிமை கோரப்படாதவைகளாக நிறுத்தப்பட்டு உள்ளன. இதன் உரிமையாளர்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொத்தேரி மற்றும் அதை சுற்றி உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், கஞ்சா விற்பனை தொடர்பான தொழில் போட்டியில், 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சந்துரு, 28, என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கஞ்சா வேட்டையில் ஈடுபட்ட போலீசாருக்கு, பொத்தேரி பகுதியில் பணி என கூறி அழைத்துள்ளனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி என நினைத்தே பெரும்பாலான போலீசார் சென்றனர். அங்கு சென்ற பின்னரே கஞ்சா வேட்டை என தெரியவந்துள்ளது. அந்தளவுக்கு ரகசிய நடவடிக்கையை, போலீசார் மேற்கொண்டுள்ளனர். இல்லையேல், கஞ்சா வியாபாரிகளுக்கு தகவல் கசிந்திருக்கும் என சொல்லப்படுகிறது.
காட்டாங்கொளத்துார்-, காவனுார், தனியார் அடுக்குமாடி குடியிருப்பு, தைலாவரம், பொத்தேரி ஏரிக்கரை, காயரமேடு சாலை, வல்லாஞ்சேரி, ஓட்டேரி, சிங்கபெருமாள் கோவில், பகத்சிங் நகர், ஓட்டேரி, ரத்தினமங்கலம், பெருமாட்டுநல்லுார், காரணைப்புதுச்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் வரும் மர்ம நபர்கள், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொது மக்கள் கூறுகின்றனர்.
அதிரடி தொடரும்!
கடந்த மாதம் 12ம் தேதி, போதை விழிப்புணர்வு பேரணியை முதல்வர் துவக்கி வைத்து, தமிழகம் முழுதும் நடந்தது. அதை அடிப்படையாக கொண்டு, தாம்பரம் காவல் ஆணையரகத்தில், கஞ்சா புழக்கம் அதிகம் உள்ள பகுதிகளை ரகசியமாக கண்காணிக்க, போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் உத்தரவிட்டார்.கண்ணகி நகர், துரைப்பாக்கத்தில், கஞ்சா புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால், அடுத்ததாக எந்த இடத்தில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது என்பதை, உளவுத் துறை மூலம் கண்காணித்தனர்.
அதில், காட்டாங்கொளத்துார், மறைமலை நகர் பகுதிகளில் வெளி மாநில மாணவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பது தெரியவந்தது.ஆந்திரா மாநில மாணவர்கள் அதிகம் தங்கியுள்ளதால், ரகசியாக கண்காணித்து, அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதிரடி சோதனை தொடரும். காவல் துறை அதிகாரிகள்பயங்கர ஆயுதங்களுடன் கஞ்சா விற்ற ரவுடி கைதுகூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதியில், கஞ்சா விற்பனை நடந்து வருவதாக, கூடுவாஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, கூடுவாஞ்சேரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, நந்திவரம் கற்பகாம்பாள் நகரில் உள்ள ஒரு வீட்டில், கஞ்சா விற்ற செல்வமணி, 29, என்பவரை கைது செய்தனர்.அவரிடம் இருந்த, 2.25 கிலோ கிலோ கஞ்சா மற்றும் நான்கு பெரிய அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.போலீசார் விசாரணையில். செல்வமணி தேடப்படும் குற்றவாளி என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.