ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் பாதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் பாதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
UPDATED : ஜூலை 08, 2024 12:00 AM
ADDED : ஜூலை 08, 2024 09:06 AM
உடுமலை:
தேவனுார்புதுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மேல்நிலை வகுப்புகளுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை ஒன்றியத்தின் கடைக்கோடி பகுதியாக, தேவனுார்புதுார் உள்ளது. இப்பகுதியை சுற்றிலுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்தும், மாணவியர் தேவனுார்புதுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர்.
இப்பள்ளி உயர்நிலையிலிருந்து, மேல்நிலையாக தரம் உயர்த்தப்பட்டு, பத்து ஆண்டுகளாகிறது. மேல்நிலையாக தரம் உயர்த்தப்பட்டது முதல், கடந்தாண்டு வரை மேல்நிலை வகுப்புகளில் கலைப்பிரிவு மட்டுமே இருந்தது.
தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு, பள்ளியின் முயற்சியால் கடந்தாண்டு முதல், முதல் வகுப்பு அறிவியல் பாடப்பிரிவு சேர்க்கப்பட்டது. இருப்பினும், அறிவியல் பாடங்களுக்கான நிரந்தர ஆசிரியர்கள் இல்லாததால், தற்காலிக ஆசிரியர்கள் வேறு பள்ளிகளிலிருந்து வந்து பாடம் நடத்தினர்.
பணி ஓய்வு மற்றும் மாறுதல் காரணமாக, நடப்பாண்டில் உயிரியல் பாடம் நடத்துவதற்கு ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வகுப்புகள் துவங்கி ஒரு மாதமான நிலையில், ஆசிரியர் இல்லாமல் பாடம் நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல் வகுப்பில் மட்டுமே, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பள்ளி பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெறுவதற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.மாணவர்களின் வகுப்புகள் பாதிக்கப்படுவதால், மேல்நிலை அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு, நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், பள்ளி மேலாண்மைக்குழுவின் வாயிலாக, கணிதப்பாடத்துக்கு ஆசிரியர் போடப்பட்டுள்ளது. கணிதம் உட்பட மற்ற பாடங்களுக்கு, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க, மாவட்ட கல்வி அலுவலகத்தில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது,' என்றனர்.