UPDATED : ஜூலை 25, 2024 12:00 AM
ADDED : ஜூலை 25, 2024 07:51 PM

சென்னை: 
முதல்வரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்திற்கு தேர்வான மாணவர்களுக்கு, நான்கு மாதங்களாக தேர்ச்சி கடிதம் வழங்கப்படவில்லை என, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ஆராய்ச்சி பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மாதம் 25,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான முதல்வரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின்படி, தகுதியான மாணவர்கள் போட்டித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால், நான்கு மாதங்களாகியும் அவர்களுக்கு தேர்ச்சி கடிதம் வழங்கப்படவில்லை.
இதனால், ஆராய்ச்சி படிப்பை துவங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதில் கல்லுாரி கல்வி இயக்குனரகம் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள், முனைவர் படிப்பில் சேர முடியாவிட்டால், அவர்கள் தேர்ச்சி பெற்றும் பயனில்லாமல் போய்விடும்.
அதற்கான காலக்கெடு முடிய இன்னும் 50 நாட்கள் கூட இல்லாத நிலையில், தேர்ச்சிக் கடிதம் வழங்கப்படவில்லை. தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல், தேர்ச்சி கடிதங்களை உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

