இட ஒதுக்கீடு விவகாரம்; பாட்னா ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
இட ஒதுக்கீடு விவகாரம்; பாட்னா ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
UPDATED : ஜூலை 30, 2024 12:00 AM
ADDED : ஜூலை 30, 2024 10:24 AM
புதுடில்லி:
பீஹாரில் இடஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் அறிவிப்பை ரத்து செய்த பாட்னா ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் சமீபத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்தது. இது சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசு வேலை மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கும் அளவை உயர்த்த மாநில அரசு முடிவு செய்தது. இதற்கு, மாநில அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
அரசு வேலை, கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்.சி., மற்றும் எஸ்டிகளுக்கான இடஒதுக்கீட்டை 50% இருந்து 65% ஆக உயர்த்தி சட்டம் இயற்றப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 43 சதவீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 20 சதவீதமும், பழங்குடியினருக்கு 2 சதவீதமும் அதிகரித்து சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து பாட்னா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இட ஒதுக்கீட்டை 50% இருந்து 65%ஆக உயர்த்தி இயற்றப்பட்ட சட்டத்தை பாட்னா ஐகோர்ட் ரத்து செய்தது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரப்பட்டது. பீஹாரில் இடஒதுக்கீடு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் அறிவிப்பை ரத்து செய்தது செல்லும் எனக் கூறிய சுப்ரீம் கோர்ட் பாட்னா ஐகோர்ட் விதித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்குகள் செப்டம்பர் மாதம் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

