UPDATED : மே 27, 2024 12:00 AM
ADDED : மே 27, 2024 10:20 AM
உடுமலை :
கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில், மாவட்டத்தில் 4,120 விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் சுயநிதி பள்ளிகள் (சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக) வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி., மற்றும் ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இத்திட்டத்தின் கீழ், புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல், 22ம் தேதி துவங்கியது; கடந்த, 20ம் தேதியுடன் நிறைவடைந்தது. மாவட்டத்தில் உள்ள, 281 பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்பில் மொத்தம், 3,330 இடங்கள் உள்ளது.
இதில், 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு மாணவர் சேர்க்கை விரைவில் நடக்கவுள்ளது. இதற்காக, மாவட்டத்தின் எட்டு தாலுகாவில் இருந்து, 4,250 விண்ணப்பங்கள் குவிந்துள்ளது.
மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஆனந்தி கூறுகையில், மொத்த விண்ணப்பங்களில் போதிய ஆவணம் இல்லாமல், 369 விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; குறிப்பிட்ட தேதிக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 130 விண்ணப்பங்கள் தகுதியற்றவையாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைக்கு, 4,120 விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறித்த விபரங்கள் பெற்றோருக்கு விரைவில் தெரிவிக்கப்படும், என்றார்.