UPDATED : ஜன 12, 2026 01:03 AM
ADDED : ஜன 12, 2026 01:03 PM
மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில், சிறுமுகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்தியக்குமார் தலைமை வகித்தார். சிறுமுகை விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி தம்பு முன்னிலை வகித்தார். சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா, கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
பேரணி சிறுமுகை தியேட்டர் மேடில் இருந்து துவங்கியது. இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக பணியாளர்கள், தனியார் பள்ளிகளின் பேருந்து ஓட்டுநர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், பணியாளர்கள், ஆட்டோ மற்றும் டெம்போ ஓட்டுநர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் ஆகியோர் என ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாகைகளை கையில் பிடித்துச் சென்றனர். பேரணி, சத்தியமங்கலம் சாலை வழியாக விஜயலட்சுமி மெட்ரிக் பள்ளியை அடைந்தது.
பள்ளியில் நடந்த சாலை பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சியில், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ராமகிருஷ்ணன், மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன் ஆகியோர் பேசினர்.

