ஆய்வக விலங்குகள் நல கருத்தரங்கு ;176 பேராசிரியர்கள் பங்கேற்பு
ஆய்வக விலங்குகள் நல கருத்தரங்கு ;176 பேராசிரியர்கள் பங்கேற்பு
UPDATED : ஆக 05, 2024 12:00 AM
ADDED : ஆக 05, 2024 09:03 AM
உடுமலை :
உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், உயிரியல் மருத்துவத்தில், ஆய்வக விலங்குகளின் நலம் மற்றும் ஊட்டசத்து குறித்த தேசிய கருத்தரங்கு நடந்தது.
உடுமலை அருகே கோழிக்குட்டையில், கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு நடந்த தேசிய கருத்தரங்கில்,கல்லுாரி முதல்வர் குமாரவேல் தலைமை வகித்தார். கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி முதல்வர் சுப்பாராவ், கருத்தரங்கு இதழை வெளியிட்டு,ஆய்வக விலங்குகள் குறித்த அவரது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., கால்நடை கல்வி இயக்குனர் சவுந்தர்ராஜன், ஆய்வக விலங்குகளின் வல்லுநர்கள் குழுமத்தின் செயலாளர் சக்திதேவன், அபுதாபி இந்திய துாதரக ஆலோசகர் பாலாஜி உள்ளிட்டோர் பேசினர்.
ஆராய்ச்சி முடிவுகள், இரண்டு தொழில்நுட்ப அமர்வுகள் விவரிக்கப்பட்டு, சிறந்த ஆராய்ச்சி முடிவுகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இக்கருத்தரங்கில், 24 கல்லுாரிகளில் இருந்து மொத்தம் 176 பேராசிரியர்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி முடிவின் அடிப்படையில், சில பரிந்துரைகள் தேர்வு செய்யப்பட்டன. அதன்படி, உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியில் ஆய்வக விலங்குகளை பயன்படுத்தும் போது, மாற்றுதல், குறைத்தல் மற்றும் செம்மைப்படுத்துதல் என்ற கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.
மேலும், பொருத்தமான ஆய்வு நெறிமுறைகளுக்கான பொருத்தமான ஊட்டசத்து மாதிரியை பின்பற்ற வேண்டும் என, கருத்தரங்கு வாயிலாக தெரிவிக்கப்பட்டது.
உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை உணவியல்துறை தலைவர் கதிர்வேலன் ஒருங்கிணைத்தார். உதவி பேராசிரியர் பாலமுருகன் நன்றி தெரிவித்தார்.