குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்புங்க! வளர்ச்சி திட்ட அதிகாரிகள் அழைப்பு
குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்புங்க! வளர்ச்சி திட்ட அதிகாரிகள் அழைப்பு
UPDATED : அக் 02, 2025 09:31 AM
ADDED : அக் 02, 2025 09:32 AM
வால்பாறை:
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வால்பாறையில், 43 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு, 855 குழந்தைகள் படிக்கின்றனர். இந்நிலையில், அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை தற்போது நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதி அங்கன்வாடி பணியாளர்கள் செய்து வருகின்றனர். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அங்கன்வாடி மையங்களை அழகுபடுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட, 43 அங்கன்வாடி மையங்களிலும், 2 வயது முதல் 4 வயது பூர்த்தியான குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கற்றுத்தரப்படுகிறது. குழந்தைகளின் அறிவாற்றலை துாண்டும் வகையில் கதை, பாட்டு, விளையாட்டு வாயிலாக கல்வி கற்றுத்தரப்படுகிறது.
அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் கல்வி கற்க தேவையான உபகரணங்கள் உள்ளன. கல்வி பயிலும் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்குப்படுகிறது. ஊட்டசத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளை கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு ஊட்டச்சத்தான உணவு வழங்கப்படுகிறது.
குழந்தைளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான உணவு வகைகளை அங்கன்வாடி வாயிலாக வழங்கப்படுகிறது. அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் மழலையர் வகுப்புக்கள் துவங்கபட்டுள்ளன.
விஜயதசமியான இன்று இரண்டு வயது நிரம்பிய குழந்தைகளை அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்பில் சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.