UPDATED : ஆக 24, 2024 12:00 AM
ADDED : ஆக 24, 2024 07:57 PM

சென்னை:
இந்தியாவில் இருந்து அதிக சுற்றுலா பயணியர் மற்றும் முதலீட்டாளர்களை, செஷல்ஸ் ஈர்க்க விரும்புகிறது என இந்தியாவுக்கான செஷல்ஸ் துாதர் லலாட்டியானா அக்கோச் தெரிவித்தார்.
இந்தியா - செஷல்ஸ் வர்த்தக மாநாடு, சென்னையில் நேற்று நடந்தது. இந்திய காமன்வெல்த் வர்த்தக கவுன்சிலின் கவுரவ வர்த்தக ஆணையர் கருணாநிதி வைத்தியநாதசாமி பேசும் போது, செஷல்ஸ் நாடு வலிமை அடைய இந்திய நிறுவனங்கள் துணைபுரிகின்றன என்றார்.
இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பின் தலைவர் ஆசிப் இக்பால் பேசும்போது, செஷல்ஸ் சென்ற முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி; அவரின் பயணத்தின் போது, பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியாவில் இருந்து கடந்த ஆண்டில் செஷல்சுக்கு, 550 கோடி ரூபாய் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது, என்றார்.
செஷல்ஸ் துாதர் லலாட்டியானா அக்கோச் பேசியதாவது:
எங்கள் நாட்டில் அமைதியான சூழலும், அரசியல் ஸ்திதரத்தன்மையும் நிலவுகிறது. கல்வியிலும் சிறந்து விளங்குகிறது. சுற்றுலா துறை முதன்மையானதாக விளங்குகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சுற்றுலா துறையின் பங்கு, 60 சதவீதம்.
கொரோனாவுக்கு பின் மீன் வளம், கடல்சார் துறை உள்ளிட்ட துறைகளில், முதலீட்டை ஈர்க்க கவனம் செலுத்துகிறோம். இந்தியா - செஷல்ஸ் இடையே வலுவான உறவு உள்ளது. சுற்றுலா, கடல்சார், புதுப்பிக்கத்தக மின்சாரம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்வதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது.
இந்தியாவில் இருந்து அதிக சுற்றுலா பயணியரையும், முதலீட்டாளர்களையும், செஷல்ஸ் ஈர்க்க விரும்புகிறது. இவ்வாறு கூறினார்.