UPDATED : நவ 04, 2024 12:00 AM
ADDED : நவ 04, 2024 03:36 PM
மாண்டியா:
பிரபலமான அரசு கல்லுாரியை, சிறையாக மாற்றி படப்பிடிப்பு நடத்தியது, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த கல்வித்துறை அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தல் எழுந்துள்ளது.
மாண்டியா நகரில் அரசு மகளிர் பி.யு., கல்லுாரி உள்ளது. இது பழமையானது. கல் கட்டடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கல்லுாரியில் ஆயிரக்கணக்கான மாணவியர் படிக்கின்றனர். குறிப்பாக கிராமப்புற மாணவியர் அதிக எண்ணிக்கையில் படிக்கின்றனர்.
இந்த கல்லுாரியை மத்திய சிறையாக மாற்றி, நடிகர் தனஞ்செயா நடிக்கும் ஜெசி படப்பிடிப்பு நடத்துகின்றனர். படப்பிடிப்புக்காக கல்லுாரியில் சில மாற்றங்கள் செய்துள்ளனர். இதன் முன்பாக பெங்களூரு மத்திய சிறை என பெயர் பலகை வைத்துள்ளனர். கொடிக் கம்பத்தை வெட்டியுள்ளனர். கட்டடத்தின் ஜன்னல் கதவுகள் மாற்றப்பட்டுள்ளன.
அரசு மகளிர் கல்லுாரியில், படப்பிடிப்பு நடத்துவதை பொதுமக்கள் கண்டித்துள்ளனர். இதற்கு அனுமதி அளித்த கல்வித்துறை அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துகின்றனர்.