தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் பல்கலையில் விற்பனை அங்காடி! அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில்

வேளாண் பல்கலையில் விற்பனை அங்காடி! அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில்

வேளாண் பல்கலையில் விற்பனை அங்காடி! அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில்


UPDATED : நவ 20, 2024 12:00 AM

ADDED : நவ 20, 2024 08:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2024 12:00 AM ADDED : நவ 20, 2024 08:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
வேளாண் பல்கலை வளாகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் விற்பனை அங்காடி அமைக்கப்படும் என, துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

கோவை வேளாண் பல்கலை வளாகத்தில், விதைகள், நாற்றுகள் போன்றவற்றில் நெல், மக்காச்சோளம், பயிறு வகைப் பயிர்கள், தோட்டக்கலை பயிர் நாற்றுகள், பருத்தி, கம்பு, சோளம், மஞ்சள் விதைக் கிழங்கு, சிறுதானியங்கள், தீவனப் பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள், காய்கறி விதைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.

இவை தவிர, பல்கலையால் தயாரிக்கப்பட்ட பயிர் பூஸ்டர்கள், உயிரியல் இடுபொருட்கள், உயிரி உரம், நுண்ணூட்டக் கலவை, பசுந்தாள் உரம், சிறுதானிய உணவு வகைகள், அங்கக இடுபொருட்கள், பண்ணை கருவிகள், நீரில் கரையும் உரம் போன்றவையும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், சுத்தமான யூகலிப்டஸ் எண்ணெய் போன்றவையும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தப் பொருட்கள் அந்தந்தத் துறை சார்ந்து, துறை அமைந்துள்ள பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

பரந்து விரிந்த பல்கலை வளாகத்தில் ஒவ்வொரு துறையும் வெவ்வேறு இடங்களில் அமைந்திருப்பதால், அத்துறை சார்ந்த பொருட்களை வாங்க, விவசாயிகள் பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. வெளியூரில் இருந்து பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி வரும் விவசாயிகளும், இதர வாகனங்களில் வரும் விவசாயிகளும் ஒவ்வொரு இடத்தையும் தேடிச் செல்வதில் சிரமம் உள்ளது.

எனவே, அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், உழவர் மையம் போன்று வேளாண் விற்பனை அங்காடி அமைக்க வேண்டும். இதனால், ஏதேனும் ஒரு பொருள் வாங்க வரும் விவசாயி, பல்கலையில் இதர தயாரிப்புகளையும் பார்த்து அதையும் வாங்கிப் பயன்படுத்த முடியும். இது பல்கலை மற்றும் விவசாயிகள் என இருதரப்புக்குமே பயனளிக்கும். இதுகுறித்து பல்கலை நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக, பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமியின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.

அவர் கூறியதாவது:

விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது அதேசமயம் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் விற்பனை காலகட்டத்தில் நாம் உள்ளோம். எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அக்ரி கார்ட் என்ற ஆன்லைன் விற்பனைத் தளத்தை உருவாக்கியுள்ளோம். கடந்த ஆண்டு ஏப்., முதல் இந்தத் தளம் செயல்பாட்டில் உள்ளது.

www.tnauagricart.com என்ற இத் தளத்தில், பல்கலையில் வினியோகிக்கப்படும் அனைத்துப் பொருட்களும் கிடைக்கும். நமக்குத் தேவையான பொருள் இருக்கிறதா, இல்லையா என்பதை நேரில் வந்து அறிந்துகொள்வதற்குப் பதில், ஆன்லைனில் பார்த்தே தெரிந்து கொள்ள முடியும். வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ள முடியும். ஏற்கனவே விற்பனை செய்யப்படும் பொருட்களுடன் தொடர்ந்து புதிய பொருட்களும் இதில் விற்பனைக்கு வைக்கப்படும்.

அக்ரி கார்ட் வசதியை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தளம் பற்றி போதுமான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்.

இருப்பினும் விவசாயிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, பல்கலை வளாகத்தில் அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் விற்பனை அங்காடி உருவாக்கப்படும். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us