தொழில் திறனை வளர்க்க உதவாத தற்போதைய கல்வி முறை: சிதம்பரம்
தொழில் திறனை வளர்க்க உதவாத தற்போதைய கல்வி முறை: சிதம்பரம்
UPDATED : ஏப் 27, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, மாணவர்களின் தொழில் திறனை வளர்ப்பதாக இல்லை என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
சென்னை பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் மேலும் பேசியதாவது:
ஒவ்வொரு குழந்தைக்கும் தான் விரும்பும் கல்வியை கற்க முழு உரிமை உள்ளது. ஆனால், வளரும் பொருளாதாரத்தில் அதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. இந்த உரிமையை அவர்களுக்கு வழங்குவதற்காகத்தான் இடஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை, கல்விக் கடன் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை 11 லட்சத்து 63 ஆயிரத்து 57 மாணவர்களுக்கு 18 ஆயிரத்து 430 கோடி ரூபாய் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கல்விக் கடன் அனைவருக்கும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கல்விக் கடன் வழங்கப்படவில்லை என்று கூறுவது பொய்யான குற்றச்சாட்டாகும்.
வளர்ந்த நாடுகளில் பள்ளிக் கல்வி முடித்து, உயர்கல்விபீகு 54 சதவீத மாணவர்கள் செல்கின்றனர். உலகில் சராசரியாக 23.2 சதவீதம் பேர் உயர் கல்வி கற்கின்றனர். ஆனால், இந்தியாவில் 11.6 சதவீத மாணவர்களே உயர்கல்விக்கு செல்கின்றனர். அடுத்த ஐந்து ஆண்டு திட்டத்தில் இதை 21 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள கல்வி மாணவர்களின் தொழில் திறனை வளர்ப்பதற்காக இல்லை. மொழியையும் எண் கணிதத்தையும், அறிவியலையும் மட்டும்தான் கல்வியாக கற்பித்து வருகிறோம். அறிவையும் கைகளையும் பயன்படுத்தி பொருள்களை உற்பத்தி செய்வது குறித்து நாம் கற்றுத் தர வேண்டும். இதற்காக தேசிய திறன் வளர்ப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று சிதம்பரம் தெரிவித்தார்.