தாய்லாந்தில் தமிழி பொறித்த முத்திரை மோதிரம் கண்டெடுப்பு
தாய்லாந்தில் தமிழி பொறித்த முத்திரை மோதிரம் கண்டெடுப்பு
UPDATED : ஜூலை 08, 2026 11:05 AM
ADDED : ஜூலை 08, 2026 11:06 AM
தாய்லாந்தில் நடக்கும் அகழாய்வில், 'தமிழி' எழுத்து பொறிக்கப்பட்ட, தங்க முத்திரை மோதிரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டின் பெட்சாபுரி மாகாணத்தின், டான்யாய் தாங் பகுதியில் நடத்தப்படும் அகழாய்வில், பழமையான புதைப்பிடம் கண்டறியப்பட்டுள்ளது.
அதில், வடகிழக்கு திசையில் தலை வைத்து புதைக்கப்பட்ட, எட்டு மனித எலும்புக் கூடுகள் மற்றும் தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. அவற்றில் ஒரு தங்க மோதிரத்தில், பிராமி எழுத்துக்கள் உள்ளன. அதை, பூச நட்சத்திரத்தால் காக்கப்பட்டவர் எனும் பொருளில் 'புசரக்ஷிடச' என பலர் படித்தனர்.
இந்நிலையில், அவை இடவலமாக பொறிக்கப்பட்ட, தமிழி எழுத்துகள் என, சிங்கப்பூரில் 'சார்' என்ற தொல்லியல் வரலாற்று தேடல் குழுவின் நிறுவனரும், மதுரையை சேர்ந்தவருமான ரஞ்சித் குமார் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
பழந்தமிழர்களின் முத்திரை மோதிரங்கள், நிறைய அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. அதாவது, கண்ணாடியில் பார்த்தால் நேராகவும், நேரில் பார்த்தால் இடவல மாற்றத்துடனும் இருக்கும் வகையில், முத்திரையையோ, எழுத்துக்களையோ, மோதிரத்தில் பொறித்து அணிவர்.
அதை தேன் மெழுகிலோ அல்லது களி மண்ணிலோ பதித்தால், நேரான முத்திரையோ, எழுத்தோ கிடைக்கும். மிக முக்கிய பிரமுகர்கள், இது போன்ற முத்திரை மோதிரங்களை அணிந்திருந்தனர்.
தாய்லாந்தில் கிடைத்துள்ள மோதிரத்திலும், இடவல மாற்றத்துடன் தான் 'அளர் வைரதன்' என்ற தமிழரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கூறியதாவது:
இந்த மோதிர எழுத்துக்களை இடவல மாற்றம் செய்து, ரஞ்சித் குமார் எனக்கு அனுப்பினார். அது தமிழி எழுத்து என்பதை உறுதியாக சொல்லலாம். 'அளர்' என்ற தமிழ் சொல்லுக்கு, நீர், மஞ்சள், உவர் எனும் பொருள்கள் உள்ளன.
அதாவது, வளமான நஞ்சை அல்லது மருத திணையை சேர்ந்தவர் எனும் பொருளில் உள்ளது. அங்கு கிடைத்துள்ள தொல்பொருட்கைளை, மேலும் ஆய்வு செய்தால், இதை உறுதி செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
