அறிவிப்போடு நிற்கும் சிப்காட் பணி; விரைவில் காரைக்குடியில் துவக்கப்படுமா?
அறிவிப்போடு நிற்கும் சிப்காட் பணி; விரைவில் காரைக்குடியில் துவக்கப்படுமா?
UPDATED : பிப் 06, 2026 01:32 PM
ADDED : பிப் 06, 2026 01:34 PM

காரைக்குடி: காரைக்குடியில் சிப்காட் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் இது வரை பணிகள் ஏதும் நடைபெறாததால், இரண்டாவது முறையும் சிப்காட் அமைக்கும் பணி கைவிடப்படுமோ என மக்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கல்வியில் தன்னிறைவு பெற்றதாக பெருமைப்பட்டாலும் வேலைவாய்ப்பில் பின் தங்கிய மாவட்டமாகவே இன்று வரை இருந்து வருகிறது. காரைக்குடி சிவகங்கை திருப்புத்துார் உட்பட மாவட்டத்தில் ஏராளமான பள்ளிக் கல்லுாரிகள் இருந்தாலும் படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல், வெளிமாநிலங்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் சூழலே இன்று வரை நிலவி வருகிறது.
இதனை போக்கும் விதமாக, சிவகங்கை மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடவும், தொழில் வளத்தை பெருக்கிடவும் 2012ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காரைக்குடியில் சிப்காட் அமைக்கப்படும் என அறிவித்து அரசாணை வெளியிட்டார்.
1400 ஏக்கரில், சிப்காட் அமைப்பதற்காக 4 வட்டாட்சியர்கள் தலைமையில் 18 அரசு பணியாளர்கள் மூலம் பணிகள் தொடங்கப்பட்டன. உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று, இளைஞர்களும் பொதுமக்களும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
ஆனால் அரசியல் தலையீடு காரணமாக திட்டம் கைவிடப்பட்டது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் மீண்டும் காரைக்குடி பகுதியில் சிப்காட் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் நிறுவனம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது.
இதற்காக திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலை அருகே இடம் தேர்வு செய்யும் பணி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது ஓராண்டை எட்டியுள்ள நிலையில் இது வரை எந்த பணியும் நடைபெறாமல் இருப்பதால் மீண்டும் சிப்காட் திட்டம் கானல் நீர் போல் கனவாகி விடுமோ என பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கி உள்ள சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விரைந்து சிப்காட் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
தாசில்தார் ராஜா கூறுகையில்:
சிப்காட் அமைப்பதற்கு, தற்போது 200 ஏக்கர் வரை இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இடம் தேர்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எங்களது பணிகளை முடித்து விட்டோம். கூடுதல் நிலம் தேவைப்படுவதால், நிலம் கையகப்படுத்தும் பணியும் நடைபெற உள்ளது என்றார்.

