படித்த பாடம் மறக்காதிருக்க துாக்கம் ரொம்ப முக்கியம்
படித்த பாடம் மறக்காதிருக்க துாக்கம் ரொம்ப முக்கியம்
UPDATED : மார் 02, 2026 08:18 PM
ADDED : மார் 02, 2026 08:20 PM

கோவை:
தேர்வுக்கு முன்பு துாங்காமல் படிப்பது, ஞாபக மறதி, கவனமின்மை, மனஅழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தி, குறைந்த மதிப்பெண்ணுக்கே வழிவகுக்கும் என்கிறார், மனநல ஆலோசகர் பிரதீபா.
துாக்கம் என்பது உடலுக்கான வெறும் ஓய்வில்லை, அது அத்தியாவசியமான உடலியல் செயல்முறை. உடலில் உள்ள இயற்கையான நேர கட்டுப்பாட்டு அமைப்பு உயிரியல் கடிகாரமாகும்.
சர்க்காடியன் ரிதம் எனப்படும் 24 மணி நேர சுழற்சியில் தூக்கம், விழிப்பு, உடல் வெப்பநிலை, ஹார்மோன் சுரப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது.
இந்த சுழற்சி பாதிக்கப்படும் போது, உடல், மனநல பாதிப்புகளுடன், கவனமின்மை, நினைவாற்றல் இல்லாமை போன்ற அறிவாற்றல் குறைபாடுகளை ஏற்படுத்தும்.
ஆழ்ந்த துாக்கம் நினைவக ஒருங்கிணைப்புக்கு முக்கியமானது. இந்த நேரத்தில் மூளை குறுகிய கால நினைவுகளை, நீண்ட கால நினைவுகளாக மாற்றுகிறது.
பகலில் கற்றுக்கொண்ட புதிய விஷயங்கள், தகவல்கள் மற்றும் திறன்களை சீரமைத்து ஆழ்ந்த துாக்கம் மூளையின் நீண்ட கால நினைவகத்தில் உறுதியாக பதிக்கிறது.
தேர்வு நேரத்தில் படித்த பாடங்களை நினைவுபடுத்த, ஆழ்ந்து துாங்கியிருப்பது முக்கியம். படிப்பில் சிறக்க, எப்போதும் தினமும் எட்டு மணி நேர ஆழ்ந்த உறக்கத்தை மாணவர்கள் பழக்கமாக்க வேண்டும்.
தேர்வு பயத்தால் இரவில் துாக்கம் வரவில்லை என்றும் சில மாணவர்கள் சொல்கின்றனர். முன்பிருந்தே நல்ல முறையில் தேர்வுக்கு தயாரானால் பயம், பதட்டத்தை தவிர்க்கலாம். எப்போதும் ஒரே நேரத்தில் துாங்கி, எழும் வழக்கத்தை கொண்டு வர வேண்டும்.
தேர்வு நேரத்தில் படித்த பாடங்களை நினைவுபடுத்த, ஆழ்ந்து துாங்கியிருப்பது முக்கியம். படிப்பில் சிறக்க, எப்போதும் தினமும் எட்டு மணி நேர ஆழ்ந்த உறக்கத்தை மாணவர்கள் பழக்கமாக்க வேண்டும்.

