பள்ளி சத்துணவு திட்டத்தை ஆய்வு செய்ய சமூக தணிக்கை சங்கத்திற்கு அனுமதி
பள்ளி சத்துணவு திட்டத்தை ஆய்வு செய்ய சமூக தணிக்கை சங்கத்திற்கு அனுமதி
UPDATED : ஜன 08, 2026 03:44 PM
ADDED : ஜன 08, 2026 03:45 PM
காஞ்சிபுரம்:
அரசு பள்ளி சத்துணவு திட்டங்களை ஆய்வு செய்வற்கு, சமூக தணிக்கை சங்கத்திற்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத் ஆகிய ஐந்து ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் மத்திய அரசு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தி வருகிறது.
இதில் 1.41 லட்சம் குடும்பங்களில் இருந்து 1.70 லட்சம் பேர், இத்திட்டத்தில் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். இதில், 1.48 லட்சம் பேருக்கு, 100 நாள் வேலை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் வேலை செய்வோரின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தல், பணிகளை கள ஆய்வு செய்தல் அதன் குறைபாடுகளை பதிவு செய்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற சமூக தணிக்கை சங்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
அதை தொடர்ந்து, 2023 - 24ம் நிதி ஆண்டில், மத்திய அரசின் பிரதமர் வீடு வழங்கும் திட்டம்; அவாஸ் பிளஸ்; பி.எம்., ஜென்மன் ஆகிய திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளின் குறைபாடுகளை சுட்டி காட்டலாம் என, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு வரவு செலவு கணக்கீடு செய்து, சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதை தொடர்ந்து, நடப்பாண்டு முதல், அரசு பள்ளிகளில், சத்துணவு திட்டம் வரவு செலவு உள்ளிட்ட கணக்குகளை ஆய்வு செய்வதற்கு, சமூக தணிக்கை சங்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த அனுமதியின்படி, அந்த சமூக தணிக்கை சங்கத்தின் ஊழியர்கள் கள ஆய்வு செய்ய உள்ளனர். இந்த ஆய்வறிக்கையை 'பள்ளி சபை' மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.

