சோனியா சுயசரிதையை வெளியிடவில்லை: பென்குயின் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
சோனியா சுயசரிதையை வெளியிடவில்லை: பென்குயின் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
UPDATED : ஆக 30, 2026 09:40 AM
ADDED : ஆக 30, 2026 09:42 AM
புதுடில்லி:
'காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் சுயசரிதையான, 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ்' என்ற புத்தகத்தை இந்தியாவில் நாங்கள் வெளியிடவில்லை' என, 'பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவின் மனைவியும், காங்கிஸ் மூத்த தலைவருமான சோனியா, 79, தன் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார். 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ்' என்ற பெயரிலான 544 பக்க புத்தகத்தை சர்வதேச அளவில், 'பென்குயின் ரேண்டம் ஹவுஸ்' நிறுவனத்தின் ஒரு பிரிவான 'ஆல்பிரட் ஏ நாப்' வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தாண்டு நவ., 10ம் தேதி புத்தகத்தை வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த சுயசரிதை புத்தகத்தை பென்குயின் நிறுவனம் வெளியிடவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அச்சடிப்பதற்கு முன்பான கையெழுத்து பிரதியின் சில பகுதிகளில் அந்நிறுவனம் அறிவுறுத்திய சில மாற்றங்கள் மற்றும் நீக்கங்களை, நூலாசிரியரான சோனியா நிராகரித்துவிட்டதால், சுயசரிதை புத்தகத்தை பென்குயின் இந்தியா நிறுவனம் வெளியிடவில்லை என்று தகவல் வெளியானது.
இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சோனியாவின் சுயசரிதை புத்தகத்தை வெளியிட நாங்கள் ஆர்வம் காட்டியது உண்மை தான். அந்த புத்தகத்தை வெளியிட தயாராகவும் இருந்தோம். ஆனால், அந்த புத்தகத்தை இந்தியாவில் நாங்கள் வெளியிடவில்லை. ஆசிரியர் மாற்றங்களை ஏற்க மறுத்ததால் அவரின் சுயசரிதை நூலை வெளியிட வேண்டாம் என, எங்கள் நிறுவனம் முடிவு செய்ததாக வெளியாகும் கருத்து, உண்மை அல்ல.
ஒரு வெளியீட்டாளராக, உண்மைகளை சரிபார்ப்பதும், நூல்களின் நலன் கருதி ஆசிரியர்களுக்கு பரிந்துரைகளை வழங்குவதும் எங்கள் உரிமையும் பொறுப்பும் ஆகும். இது, வெளியீட்டு செயல்முறையின் இயல்பான ஒரு பகுதி. இதற்கும், புத்தக வெளியீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. புத்தகத்தை வெளியிடுவது தொடர்பாக நூல் ஆசிரியரிடம் பேச்சு நடத்தினோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சோனியாவுடன் நடத்திய பேச்சு தொடர்பான விபரங்களை வெளியிட பென்குயின் இந்தியா நிறுவனம் மறுத்துவிட்டது. புத்தகத்தை வெளியிடும் பணியில் இருந்த அந்நிறுவனம் விலகியதை அடுத்து, பல்வேறு இந்திய நிறுவனங்கள், சோனியாவின் சுயசரிதையை வெளியிட ஆர்வம் காட்டியுள்ளன. இருப்பினும், புத்தகத்தின் வெளியிடுவதற்கான ஒப்பந்தத்தில், 'ஹார்பர் காலின்ஸ்' நிறுவனம் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சுயசரிதை புத்தகத்தில், ராஜீவுடன் காதல் வயப்பட்டது முதல் தற்போதை அரசியல் நிலை வரை அனைத்து விஷயங்களையும் விரிவாக சோனியா விவரித்துள்ளார் என கூறப்படுவதால், 'பிலாங்கிங்' புத்தகத்திற்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
