UPDATED : பிப் 17, 2026 02:13 PM
ADDED : பிப் 17, 2026 02:17 PM

திருப்பூர்:
'துணைவன்' இணையதளம் உருவாக்கம் மற்றும் செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு நல்கியதற்காக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலுக்கு (ஏ.இ.பி.சி.,) சுங்கத்துறை விருது வழங்கி கவுரவித்துள்ளது.
ஏற்றுமதியாளர்களுக்கான சுங்க செயல் முறைகளை எளிமைப்படுத்தவும், வெளிப்படைத்தன்மை மற்றும் திறனை மேம்படுத்தவும் 'துணைவன்' இணையதளம் உருவாக்கப்பட்டது.
இதற்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) ஒத்துழைப்பை பாராட்டி, திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில், சுங்கத்துறை விருது வழங்கி கவுரவித்தது.
சிறப்பு பொருளாதார செயலாக்க மண்டலத்தின் மேம்பாட்டு கமிஷனர் அலெக்ஸ் பால் மேனன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சுங்கத்துறை தலைமை கமிஷனர் விமலநாதன் முன்னிலையில், ஏ.இ.பி.சி., சார்பில், பிராந்திய இயக்குனர் ஈஸ்வரசுந்தர் விருதை பெற்றுக்கொண்டார்.
ஏற்றுமதி, இறக்குமதி துறையில் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்கள் மற்றும் சிறந்த பணியாளர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.
“துணைவன் போர்ட்டல் மூலம், 491 வழக்குகள் பதியப்பட்டு, 425 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள், 'துணைவன்' செயலியை அதிகம் பயன்படுத்த வேண்டும்,” என்று தெரிவிக்கப்பட்டது.
வெளிப்படை சேவை
திருச்சி சுங்கத்துறை மண்டலம், உறுதியான கண்காணிப்பை மேற்கொள்வதுடன், ஏற்றுமதியாளர்களுக்கு திறம்படவும், வெளிப்படையாகவும் சேவைகளை வழங்கி வருகிறது. ஏற்றுமதி சமூகத்தை பாதுகாக்கும் தடையற்ற வர்த்தகத்தை மேம்படுத்தும் பணி வெற்றியடைய வேண்டும்.
- சக்திவேல், தலைவர்.

