மழையால் சான்றிதழ் தொலைத்தவர்கள் நகல் பெறுவதற்கான சிறப்பு முகாம்
மழையால் சான்றிதழ் தொலைத்தவர்கள் நகல் பெறுவதற்கான சிறப்பு முகாம்
UPDATED : டிச 06, 2024 12:00 AM
ADDED : டிச 06, 2024 08:59 AM
கிருஷ்ணகிரி:
மழையால் சான்றிதழ் தொலைத்தவர்கள் நகல் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:
வங்கக்கடலில் உருவான, 'பெஞ்சல்' புயலின் தாக்கத்தால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டங்களில், தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல வீடுகள் சேதமடைந்தன. வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் குடியிருந்தோர் தங்கள் சான்றுகளை இழக்க நேரிட்டது. இதனால், சான்றிதழ்கள் தொலைந்தவர்களுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
அதன்படி, ஊத்தங்கரை காமராஜ் நகர், அண்ணா நகர், நேரு நகர், கொல்லப்பட்டி, ஜீவா நகர், சிங்காரப்பேட்டை எம்.ஜி.ஆர்., நகர், திருவனப்பட்டி, கல்லாவி மற்றும் கெங்கிநாயக்கன்பட்டி ஆகிய, 9 இடங்களிலும், போச்சம்பள்ளி தாலுகாவில் போச்சம்பள்ளி, மத்துார், நாகரசம்பட்டி மற்றும் பாரூர் ஆகிய, 4 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதில், சம்மந்தப்பட்ட வி.ஏ.ஓ., ஆர்.ஐ., மற்றும் சம்மந்தப்பட்ட போலீசார் கலந்து கொள்கின்றனர்.பொதுமக்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு, தொலைந்துபோன தங்கள் சான்றிதழ்களுக்கு நகல் சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.