மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி: அழைக்கிறது தமிழ் வளர்ச்சித்துறை
மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி: அழைக்கிறது தமிழ் வளர்ச்சித்துறை
UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM
ADDED : ஜூலை 04, 2024 08:27 AM
கோவை:
நமது நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களது கருத்துக்கள், சமூக சிந்தனைகளை இளைய தலைமுறையினரிடம் சேர்ப்பிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித்துறையால் மாவட்ட அளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி, பாராட்டுச் சான்றிதழ், பரிசு வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் படிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வரும், 9ம் தேதி கலெக்டர் அலுவலக பழைய கட்டடத்தில், இரண்டாவது தளத்தில் உள்ள கூட்டரங்கில் பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது.
வெற்றி பெறுவோருக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களில் இருவர் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு பரிசுத்தொகை ரூ.2,000 வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்களது பெயர் பட்டியலை, 7ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். www.tamilvalar.cbegmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
பள்ளி மாணவர்களுக்கு, சமூகத் தொண்டில் அம்பேத்கர்; சுய மரியாதையும் அம்பேத்கரும்; சட்டமேதை அம்பேத்கர் என்கிற தலைப்பிலும், கல்லுாரி மாணவர்களுக்கு, அம்பேத்கரின் சீர்திருத்த சிந்தனை; அரசியலமைப்பின் சிற்பி; அம்பேத்கர் கண்ட சமத்துவம் என்ற தலைப்பிலும், பேச்சுப்போட்டி நடத்தப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு காலை, 9:30 மணிக்கு, கல்லுாரி மாணவர்களுக்கு பிற்பகல், 2:30 மணிக்கு போட்டி நடைபெறும். கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.