வைரஸ் காய்ச்சலால் மாணவர் பலி; டெங்கு பாதித்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
வைரஸ் காய்ச்சலால் மாணவர் பலி; டெங்கு பாதித்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
UPDATED : அக் 21, 2024 12:00 AM
ADDED : அக் 21, 2024 08:21 AM
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியம், சங்கரமூர்த்திபட்டியில் வைரஸ் காய்ச்சலால் பள்ளி மாணவர் மோகித்குமார் 10, பலியானார்.
அதே பகுதியில் இருவர் டெங்கு காய்ச்சலினாலும், 4 பேர் காய்ச்சலால் தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெரியகுளம் ஒன்றியம், குள்ளப்புரம் ஊராட்சி 5 வது வார்டு சங்கரமூர்த்திபட்டி கோயில் தெருவைச் சேர்ந்த நாகராஜ், ரம்யா மகன் மோகித்குமார் 10. தனியார் பள்ளியில் 5 ம் வகுப்பு படித்தார். அக்.14ல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
டெங்கு பாதிப்பு: இந்தப்பகுதியைச் சேர்ந்த முருகேஸ்வரி 14, கிரித்திக் 10 ஆகிய இருவர் டெங்கு காய்ச்சலாலும், பூமிஜா 6. ஹரீஷ் 17 ஆகியோர் வைரஸ் காய்ச்சலால் தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஷ்வந்த் 7. ஜோதிபிரபா 9, ஆகியோர் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கழிவு கலந்த குடிநீர் சப்ளை, சாக்கடை, குப்பை அகற்ற பணியாளர்கள் வருவதில்லை. சுகாதாரமற்ற சூழலால் நோய் பரவி மாணவன் இறந்ததாக பொதுமக்கள் கூறினர்.
தேவதானப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் கோமதி கூறுகையில், மோகித்குமார் வைரல் காய்ச்சலினால் இறந்ததாக தெரிவித்தார்.

