அப்டேட் ஆகாத கியூட் தேர்வு வெப்சைட்; மாணவர்கள் குழப்பம்
அப்டேட் ஆகாத கியூட் தேர்வு வெப்சைட்; மாணவர்கள் குழப்பம்
UPDATED : மார் 10, 2025 12:00 AM
ADDED : மார் 10, 2025 06:14 PM

கிருஷ்ணகிரி:
பல்கலைகளுக்கான, கியூட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதளம், அப்டேட் ஆகாததால் மாணவர்கள், பாடங்களை தேர்வு செய்ய முடியாமல், குழப்பத்தில் தடுமாறி வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள, 46 மத்திய பல்கலைகள் உள்பட மாநில பல்கலை, நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலை என, மொத்தம், 250க்கும் மேற்பட்ட பல்கலைகளில் உயர்கல்வி படிக்க நுழைவுத்தேர்வு, காமன் யுனிவர்சிட்டி என்ட்ரன்ஸ் டெஸ்ட் (கியூட்) என்ற பெயரில், நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சிஸ் நடத்தி வருகிறது. இந்த தேர்வு மூலம், இளநிலையிலான கலை அறிவியல், பொறியியல் படிப்புகளிலும் மாணவர்கள் சேர முடியும். இந்தியா முழுவதும், மூன்று லட்சம் இடங்களுக்கு ஆண்டுதோறும், 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி வருகின்றனர்.
கியூட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, https:/cuet.nta.nic.in என்ற இணையதளத்தில், மார்ச், 1ல் தொடங்கியது. மார்ச், 22ல், ஆன்லைன் பதிவு முடிவடைகிறது. விண்ணப்பிக்க இன்னும், 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இணையதளத்தில் பல்கலை குறித்த விபரம், அப்டேட் ஆகாததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து ராசிபுரம் பகுதியை சேர்ந்த கல்வியாளர் சுரேஷ் கூறியதாவது:
கியூட் தேர்வில் மொழிப்பாடம், பொதுத்தேர்வு மற்றும் மாணவர் சேர விரும்பும் துறையில், மூன்று பாடம் என, மொத்தம், ஐந்து தேர்வுகள் மட்டுமே எழுத முடியும். பாடங்களை மாணவர்கள் பிளஸ் 2வில் படித்தவை மட்டுமே எழுத தேவையில்லை. மாணவர்கள் சேர விரும்பும் பலைகலையில், என்ன பாடங்களை தகுதியாக கூறியுள்ளார்களோ அதில் தேர்வு எழுத வேண்டும். கியூட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தும் மத்திய பல்கலைகள், மாநில பல்கலைகள், தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகள் விபரம், விண்ணப்பிக்கும் இணையதளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
இதில், மத்திய பல்கலையில் மட்டும் தான் அனைத்து துறை மற்றும் அதில் சேர தேர்வு எழுத வேண்டிய பாடங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளனர். ஆனால், மற்ற பல்கலைகளில் கல்லுாரிகள் குறித்த விபரம் முழுவதுமாக, அப்டேட் ஆகவில்லை. இதனால், விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாங்கள் எந்த பாடத்தை தேர்வு செய்வது என முடிவு செய்ய முடியாமல் குழப்பத்தில் தடுமாறி வருகின்றனர். இன்னும், 12 நாட்கள் மட்டுமே உள்ளதால், கியூட் நுழைவுத்தேர்வு இணையதளத்தை விரைவில், அப்டேட் செய்ய வேண்டும். இல்லை என்றால் மாணவர்கள் சரியான பாடத்தை தேர்வு செய்யாமல் ஏமாற்றமடைவர்.
இவ்வாறு அவர் கூறினார்.