பள்ளி கூடம் திரும்பிய மாணவர்கள் அச்சத்தை போக்க பரிசு வழங்கி வரவேற்பு
பள்ளி கூடம் திரும்பிய மாணவர்கள் அச்சத்தை போக்க பரிசு வழங்கி வரவேற்பு
UPDATED : செப் 03, 2024 12:00 AM
ADDED : செப் 03, 2024 10:20 AM

பந்தலுார்:
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவு பாதிப்பு நடந்து, ஒரு மாதத்திற்கு பின் பள்ளிக்கூடம் திரும்பிய மாணவர்களுக்கு பரிசு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
கேரள மாநிலம் மேப்பாடி பகுதியில் கடந்த, 30ஆம் தேதி அதிகாலை, ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகள் மண்ணில் புதைந்தன. இதில், 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், நுாற்றுக்கணக்கானோர் காணாமல் போய் உள்ளனர்.
நிலச்சரிவில் முண்டக்கை மற்றும் சூரல்மலை அரசு பள்ளிகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. இதனால், பள்ளிகளில் படித்த மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கூடம் செல்ல முடியாமல் இருந்தனர்.
இந்நிலையில், மேப்பாடி பஜார் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பஞ்சாயத்து கட்டடங்கள், அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் வகுப்பறைகளாக மாற்றம் செய்யப்பட்டன.
அதில், சூரல்மலை அரசு மேல்நிலைப்பள்ளில் பயின்ற மாணவர்கள், 546 பேர் மேப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியிலும்; முண்டக்கை அரசு துவக்கப்பள்ளி, 61 மாணவர்களுடனும் செயல்பட துவங்கி உள்ளது.
கடந்த, 33 நாட்களுக்கு பின் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை, கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி, அமைச்சர்கள் கேளு, முகமது ரியாஸ், ராஜூ, எம்.எல்.ஏ., சித்திக் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் இணைந்து வரவேற்று வகுப்பறைகளுக்கு அழைத்து சென்றனர். மாணவர்களின் அச்சத்தை போக்கி, மகிழ்ச்சி ஏற்படுத்த சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
புதிய வகுப்பறை கட்டடங்கள் வண்ண ஓவியங்கள் தயார் படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் வந்து செல்ல சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.