UPDATED : ஜன 12, 2026 01:42 AM
ADDED : ஜன 12, 2026 01:42 PM

கடலூர்: கடலூர் சிங்கார தோப்பு கடற்கரையில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் மத்திய அரசின் உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள 28 கடற்கரை கிராமங்களில் தேசிய கொடியேற்றப்பட்டு வருகிறது. அதன்படி கடலூர் துறைமுகம், சிங்காரத்தோப்பு கடற்கரையில் தேசிய கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக கடலூர் கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் அக்கரைகோரி கடற்கரையில் பேரணியை எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பேரணியில் என்.சி.சி., மாணவர்கள், மீனவ ஊர்க்காவல் படை, மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
சிங்காரத்தோப்பு கடற்கரையில் பேரணி முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, அங்கு எஸ்.பி., ஜெயக்குமார் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், டி.எஸ்.பி., தமிழ் இனியன், கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் பத்மா, முதுநகர் இன்ஸ்பெக்டர் கதிரவன், சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், இந்திய கடற்படை, கடலோர காவல் படை, மீன்வளம் மற்றும் வனத்துறை அலுவலர்கள், சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி கிராம முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

