UPDATED : பிப் 18, 2026 02:53 PM
ADDED : பிப் 18, 2026 02:55 PM
ஈரோடு:
தாட்கோ மூலம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்படுகிறது. தற்போது தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுனர் பயிற்சி வழங்க உள்ளது.
இதில் சேர ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த, 18 முதல், 32 வயது இளைஞராக இருக்க வேண்டும். குடும்ப வருவாய் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 10, பிளஸ் 2 வகுப்பு, தொழில் பயிற்சி, பட்ட படிப்பு, பொறியியல் படிப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி முடிக்கும் இளைஞர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு கழக அங்கீகார சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்புடன் ஆரம்ப கால ஊதியம் ரூ.18 ஆயிரம் முதல், 30 ஆயிரம் வரை கிடைக்க வழி வகை செய்யப்படும்.
வேலை வாய்ப்பை விரும்பாத இளைஞர்கள், சுயமாக தொழில் தொடங்க தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.
பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி, உணவுக்கான செலவினம் டாக்டர் ரெட்டி நிறுவனம் மூலம் ஏற்கப்படும்.
விபரங்களுக்கு, தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், 6வது தளம், கலெக்டர் அலுவலகம், ஈரோடு என்ற முகவரியிலும் 0424 - 2259453 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

