அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்கள் சாலை மறியலால் பரபரப்பு
அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்கள் சாலை மறியலால் பரபரப்பு
UPDATED : நவ 08, 2025 10:18 AM
ADDED : நவ 08, 2025 10:40 AM
அரியாங்குப்பம்:
வீராம்பட்டினம் அரசு பள்ளியில், ஆசிரியர் பற்றாக் குறையை கண்டித்து, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, மறியலில் ஈடுபட்டனர்
வீராம்பட்டினத்தில், சிங்காரவேலர் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6 முதல் 10ம் வகுப்பு வரை, மொத்தம், 142 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
14 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இப்பள்ளியில், 8 ஆசிரியர்கள் மட்டுமே பணி புரிகின்றனர். அதில், இரு ஆசிரியர்கள் தேர்தல் பணி தொடர்பாக சென்றுள்ளனர்.
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து பாடங்களையும் நடத்தும், ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு, கடந்த காலாண்டு தேர்வில், பல மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டாக, ஆசிரியர்கள் நிரப்பாமல் இருப்பதை கண்டித்து, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, நேற்று காலை 10:00 மணியளவில் பள்ளி முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த, பாஸ்கர் எம்.எல்.ஏ., முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன் ஆகியோர், மறியல் செய்த மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். கல்வித்துறை உயரதிகாரிகளிடம் பேசி, விரைவில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதன் பின், மாணவர்கள், கலைந்து, வகுப்பு களுக்கு சென்றனர். மறியலால், 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
பல அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளின் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பட்டு வருகின்றன என, அரசு விழாக்களில், கல்வி அமைச்சர் நமச்சிவாயம், பேசி வருகிறார். ஆனால், பல அரசு பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதும், அதனால், மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

