கல்லுாரி நுாலகத்தில் பயங்கர தீ விபத்து; செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
கல்லுாரி நுாலகத்தில் பயங்கர தீ விபத்து; செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
UPDATED : மே 16, 2025 12:00 AM
ADDED : மே 16, 2025 11:01 AM
பீதம்புரா:
பீதம்புராவில் உள்ள பிரபல ஸ்ரீ குரு கோபிந்த் சிங் கல்லுாரி நுாலகத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து காலை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
பீதம்புராவில் உள்ளது ஸ்ரீ குரு கோபிந்த் சிங் வணிகக் கல்லுாரி. டில்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த கல்லுாரியின் நுாலகத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து காலை 8:55 மணியளவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. நான்கு மாடி நுாலகக் கட்டடத்தின் முதல் மூன்று தளங்களில் தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு பதினொரு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. 45 நிமிடங்கள் போராடி தீயை தீயணைப்பு படையினர் காலை 9:40 மணியளவில் கட்டுப்படுத்தினர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறியவும், சேதத்தை மதிப்பிடவும் விசாரணை நடந்து வருகிறது.
தீ விபத்தில் நுாற்றுக்கணக்கான புத்தகங்கள் எரிந்துவிட்டன. இழப்பு குறித்த சரியான மதிப்பீடு, அது அழிக்கப்பட்ட பின்னரே சாத்தியமாகும்.
இதனால், காலையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த தேர்வுகளுக்கான மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுாலகத்தின் சர்வரில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நுாலகத்தின் பழைய மற்றும் பொக்கிஷமாக கருதப்பட்ட புத்தகங்கள் கடுமையாக சேதமடைந்தன.