UPDATED : மே 25, 2024 12:00 AM
ADDED : மே 25, 2024 12:15 PM

உடுமலை:
உடுமலை கோட்டத்தில், அரசுப்பள்ளிகளுக்கு வினியோகிக்க பாடப்புத்தகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கல்வியாண்டு, 2024 - 25 ஜூன் மாதம் முதல் துவங்குகிறது. தற்போது பள்ளிகள் திறக்கப்படும் தேதியையும் அரசு அறிவித்துள்ளது. இதனால், கல்வியாண்டு துவங்குதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.
புதிய கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள், மாவட்ட வாரியாக வழங்கப்பட்டுள்ளன. உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களுக்கான, அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்கள், மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வட்டாரத்திலும், அரசு பள்ளி ஒன்றில் அவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மே இறுதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் வினியோகிக்கவும், பள்ளி முதல் நாளில் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்குவதற்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், அந்தந்த வட்டாரத்துக்குட்பட்ட அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாக பாடப்புத்தகங்கள் வழங்கும் பணிகள், வரும் 27ம் தேதி முதல் துவங்குகிறது.